Monday, August 2, 2010 | By: INDIA 2121

டாக்டர்கள் சிபாரிசு செய்யும் விளம்பரங்கள்

 
  டாக்டர்கள் சிபாரிசு செய்வது என்று சொல்லி ஒரு பொருளை விற்றால் மக்கள் நம்பி வாங்குவார்கள். அது டாக்டர் மீதான நம்பிக்கையின் வெளிப்பாடு. டாக்டரே போலியாக இருப்பாரோ என்ற கேள்வி எழும் நிலைமை ஏற்பட்ட பிறகு இந்த மாதிரியான விளம்பரத்துக்கு பலன் கிடைத்தால் பெரிய விஷயம்.
ஆனால், டாக்டர்கள் தம்மை பற்றி விளம்பரம் செய்யக்கூடாது என்று தடை இருக்கும் நாட்டில், டாக்டர்களின் சங்கம் எப்படி ஒரு பொருளுக்கு விளம்பரம் செய்ய முடியும்? இரண்டு லட்சம் டாக்டர்கள் உறுப்பினராக இருக்கும் இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ) அதைத்தான் செய்கிறது. டிராப்பிக்கானா பழரசம், குவாக்கர் ஓட்ஸ், டெட்டால், லைசால், அக்வாகார்ட், பேம்பர்ஸ் நாப்கின் என்று பல பொருட்கள் ஆரோக்கியத்துக்கு அல்லது சுகாதாரத்துக்கு நல்லது என்று ஐ.எம்.ஏ சான்றிதழ் அளித்துள்ளது. அதை சம்பந்தப்பட்ட கம்பெனிகள் தங்கள் விளம்பரங்களில் குறிப்பிடுகின்றன. இதற்காக சில கோடிகள் ஐ.எம்.ஏ.க்கு தரப்படுகிறது.
உலகத்திலேயே பொருள் தயாரிப்பாளர்களின் விளம்பரத்துக்கு ஒத்தாசையாக இருந்து அதற்காக பணம் பெறும் முதலாவது மருத்துவ அமைப்பு இதுதான். தயாரித்து பதப்படுத்திய பழச்சாறு தினமும் 200 மில்லிக்கு மேல் குழந்தைகளுக்கு கொடுத்தால் வளர்ச்சி பாதிக்கும், அதிக குண்டாகும் என ஆய்வுகள் எச்சரிக்கின்றன. இதை சுட்டிக்காட்டி ஒரு டாக்டர் தேசிய மனித உரிமை கமிஷனுக்கு புகார் அனுப்பினார். கமிஷன் ஐ.எம்.ஏ.க்கு நோட்டீஸ் அனுப்பியது. ‘இனி அப்படி செய்ய மாட்டோம். ஆனால் ஒப்பந்தத்தை இப்போது ரத்து செய்தால் நிறைய நஷ்ட ஈடு கொடுக்க நேரும்’ என்று ஐ.எம்.ஏ முறையிட்டுள்ளது. இந்த மாதம் கூடி ஒழுங்கு விதிகளை திருத்தி இதுபோன்ற அவலங்கள் நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுப்போம் என இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ) கூறியுள்ளது.
போலி, காலாவதி பிரச்னைகளால் பொதுமக்கள் மிரண்டு நிற்கும்போது தவறான சான்றிதழ் மூலம் ஆபத்துக்கு கதவு திறக்கும் வேலையை மருத்துவ அமைப்புகள் நிறுத்திக் கொள்ள வேண்டும். தனி மனிதர்கள்தான் பணம் சம்பாதிக்க பறக்கிறார்கள் என்றால், எந்த தேவையும் இல்லாத தொழில் அமைப்புகள் எதற்காக கோடிகளை தேடி ஓட வேண்டும் என்பதற்கும் மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய பொறுப்பு ஐ.எம்.ஏ.க்கு இருக்கிறது.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails