Monday, August 9, 2010 | By: INDIA 2121

காமன்வெல்த் விளையாட்டு

 
காமன்வெல்த் விளையாட்டு போட்டி அமைப்புக்குழு தலைவர் சுரேஷ் கல்மாடியை பாராட்ட வேண்டும். மீடியா மொத்தமும் அடித்து துவைத்து உலர்த்தினாலும் அசராமல் சிரிக்கிறார். ‘நான் ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை’ என்கிறார்.
‘பிரதமரும் சோனியா காந்தியும் சொன்னால் ராஜினாமா செய்வேன் ஆனால் போட்டிகள் முடிந்த பிறகு’ என்று அவர் சொல்வதை கேட்டு எதிரிகளும் புன்னகைப்பார்கள். கல்மாடிக்கு எதிரிகளுக்கு  பஞ்சமில்லை. செல்வாக்கு மிக்கவர்கள். அதனால்தான் கல்மாடியின் நம்பிக்கைக்கு உரிய அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய முடிந்தது.
அக்டோபர் 3 முதல் 14 வரை காமன்வெல்த் போட்டிகள் நடக்க இருக்கிறது. புதுடெல்லியை புரட்டிப் போட்டு பத்தாயிரம் கோடி செலவில் புதுப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். 1951, 1982ல் ஆசிய விளையாட்டு போட்டிகளை நடத்திய அனுபவம் டெல்லிக்கு இருக்கிறது. ஆனாலும் இது பிரமாண்ட ஏற்பாடு. 2020ல் ஒலிம்பிக் போட்டியை கொண்டுவர போடும் அடித்தளம். வேலைகள் மேயில் முடிந்திருக்க வேண்டும். இன்னும் நடக்கிறது. போட்டி முடிந்த பிறகும் தொடரக்கூடும்.
சரமாரியாக ஊழல் புகார்கள் பறக்கின்றன. பல நாடுகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக மணிசங்கர் அய்யர் தொடங்கிவைத்தார். அது ஒரு புகாரே அல்ல. டெல்லிக்கு வரும் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு லட்சம் டாலர் பணமும் மொத்த செலவுத் தொகையும் தருவதாக வாக்குறுதி கொடுத்துதான் 46க்கு 22 என்ற ஓட்டு வித்தியாசத்தில் கனடாவை தோற்கடித்து இந்தியா இந்த போட்டியை நடத்த அனுமதி பெற்றது. அப்போது ஹைதராபாதில் நாம் ஆப்ரிக்க , ஆசிய விளையாட்டு போட்டிகளை வெற்றிகரமாக நடத்தினோம். இந்தியாவிடம் வசதி இருக்கிறது என்ற நம்பிக்கை மற்ற நாடுகளுக்கு ஏற்பட்டது. அவர்களுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றுவது ஊழலாகாது.
பல்லாயிரம் கோடிகள் புழங்கும் திட்டத்தை செய்கூலி சேதாரம் இல்லாமல் நிறைவேற்ற முடியாது. இந்தியாவில் நடந்த முதல் ஊழல் இதுதான் என்பது போல சிலர் துள்ளிக் குதித்து விமர்சிப்பது போலித்தனம். 826 பதக்கம் ரெடியாக இருக்கிறதாம். 76 நாடுகள் பங்குபோட வருகின்றன. 2006 மெல்பர்ன் போட்டியில் இந்தியாவுக்கு 50 கிடைத்தது. டெல்லியில் அதிகம் கைப்பற்ற வழி தேடுவோம்.

3 comments:

Post a Comment

Related Posts with Thumbnails