Monday, September 20, 2010 | By: INDIA 2121

பூமியை தாக்குமா? சூரிய சூறாவளி

  உலகம் அழியப் போகிறது என்று உள்ளூர் சாமியார்கள் முதல் நாசா விஞ்ஞானிகள் வரை அவ்வப்போது பீதி கிளப்புவார்கள். ‘2010, 2012&ல் உலகம் அழிஞ்சா இப்படித்தான் இருக்கும்.. பார்த்துக்கோங்க’ என்று சில ஹாலிவுட் படங்களும் அடிக்கடி வெளியாகி லப்டப்பை அதிகரிக்கின்றன. கிறிஸ்து பிறப்பதற்கு சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் முன்பு தென்அமெரிக்காவில் வாழ்ந்ததாக கூறப்படும் இனம் மயன் இனம். கி.மு. 3113&ல் ஆரம்பித்து மிகத் தெளிவாக அந்த காலத்திலேயே காலண்டர் தயாரித்திருக்கின்றனர். அந்த காலண்டர் 2012&ம் ஆண்டுடன் முடிகிறது. ‘மயன் மக்களே சொல்லிட்டாங்க.. 2012&ல் உலகம் அழியப்போகுது’ என்று ஒரு கூட்டம் கிளம்பியிருக்கிறது. புரளிகள் ஒரு பக்கம்.. ‘ஒருவேளை அழிஞ்சிடுமோ’ என்று சீரியசாய் ஆராய்ச்சிகள் ஒரு பக்கம்.
‘அழிகிறதோ, இல்லையோ.. 2012&ம் ஆண்டு டிசம்பர் 21&ம் தேதி படுபயங்கர பாதிப்புகள் ஏற்படப்போவது நிச்சயம்’ என்கின்றனர் கொடைக்கானல் இந்திய வான்ஆராய்ச்சிக் கழக வல்லுனர்கள்.
“2012 டிசம்பர் 12&ம் தேதி இயல்புக்கு மாறாக பயங்கர சூரியப் புயல் ஏற்பட உள்ளது. இதை தடுக்க உடனடியாக உரிய நடவடிக்கை விரைந்து எடுக்கப்பட வேண்டும், தவறினால் உலகம் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். அதிக உஷ்ணக் கதிர்கள் மற்றும் மின்காந்த அலைகளைத் தாங்கி உருவாகி வரப்போகும் சூரியப் புயல் பூமியை நெருங்கும் போது பயங்கரமான பாதிப்புகள் ஏற்படும். சூரியனில் இருந்து வெளியேறும் உஷ்ணக் காற்று பூமியை தகிக்கும். உலகம் முழுவதும் மின்சாரம், விண்கலங்கள், செயற்கைக்கோள், தொலைதொடர்பு, செல்போன் ஆகியவை அனைத்தும் ஸ்தம்பிக்கும்” என்று அந்த நிறுவனத்தின் விஞ்ஞானி சுந்தரராமன் கூறினார்.
கனடாவின் க்யூபெக் மாகாணத்தை இதேபோன்ற பயங்கர சூரியப் புயல் 1989&ம் ஆண்டு தாக்கியது. தொடர்ச்சியாக 9 நாட்கள் கனடாவே ஸ்தம்பித்துவிட்டது. 2012&ல் வரப்போகும் சூரியப் புயல் மொத்த பூமியையும் தாக்கப்போகிறது என்றும் கூறியுள்ளார். இதை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தில் பணிபுரியும் ஆராய்ச்சியாளர் மவுஸ்மி திக்பதியும் உறுதிப்படுத்தி உள்ளார்.

குண்டூஸ்.. டோன்ட் ஒர்ரி ஹாலிவுட் நடிகைகள் ஆறுதல்

 ஹாலிவுட் நடிகை ஜெனிபர் ஹட்சன் (29). நடிகைகள், பாடகிகள் ஸ்லிம்மாக இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை உடைத்தெறிந்தவர். 2006&ல் ட்ரீம்கேர்ள்ஸ் படத்துக்காக சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை பெற்றவர். இதெல்லாம்விட.. அதிபர் ஒபாமாவின் நண்பர். பெவர்லி ஹில்ஸ் பகுதியில் கடந்த ஆண்டு நிதி திரட்டும் விழாவில் ஒபாமா கேட்டுக்கொண்டதால் நிகழ்ச்சியில் பாடி அசத்தியவர்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
உடம்பு இளைத்தால் நல்லதுதான். நானும் முயற்சி செய்கிறேன். ஆனால், இளைக்காவிட்டால் அலட்டிக் கொள்வதில்லை. நான் டயட்டில் இருக்க ஆரம்பித்த பிறகு, ஆடை சைஸ் 5 முறை அதிகரித்துவிட்டது. இப்போதெல்லாம் எவ்வளவு வெயிட் இருக்கிறேன் என்றுகூட பார்ப்பதில்லை.
‘குண்டாக இருக்கிறீர்களே’ என்று மற்றவர்கள் சொல்லத்தான் செய்வார்கள். அதற்காக நாம் கவலைப்பட்டு மகிழ்ச்சியை தொலைக்க வேண்டுமா? நமக்கு நாம் ஓகேவா? அதுபோதும்.
இவ்வாறு ஜெனிபர் கூறினார்.
இதே கருத்தை அமெரிக்க மாடல் அழகியும் நடிகையுமான கிம் கர்டாஷியனும் (29) கூறியுள்ளார். ‘சூப்பர் ஸ்டிரக்சர்’ என்று உலகம் முழுவதும் புகழப்படுபவர். தன்னிடம் பிடிக்காத ஏரியா தொடைப்பகுதி என்கிறார் இவர். “எவ்வளவோ பயிற்சி செய்கிறேன்.. ஓடுகிறேன். தொடை அளவு குறையவில்லை. என் தொடைகள் இன்னும் சிறிய சைஸில் இருந்திருந்தால் ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பேன். ஆயிரம்தான் இருந்தாலும் என் தொடையாச்சே. வெறுக்க முடியுமா? விரும்பியது கிடைக்கவில்லை என்றால், கிடைத்ததை விரும்பவேண்டியதுதான்” என்கிறார்.
Tuesday, September 7, 2010 | By: INDIA 2121

3-ம் உலகப் போர் மூளும் பீதியை கிளப்பும் நாஸ்டர்டாம் கணிப்பு


 14-ம் நூற்றாண்டில் பிரான்சு நாட்டில் வாழ்ந்தவர் நாஸ்டர்டாம். எதிர்காலத்தை பற்றி கணித்து கூறும் ஞானியான இவர் 5079-ம் ஆண்டு வரை உலகில் என்னென்ன நடக்க போகிறது என்று கணித்து கூறியுள்ளார். அவர் கணித்தபடி முதல் உலகப்போர், 2-ம் உலகப் போர் மற்றும் பல்வேறு பூகம்பங்கள், இயற்கை பேரழிவுகள் ஏற்பட்டு உள்ளன.
 சமீபத்தில் நடந்த இரட்டை கோபுரம் தகர்ப்பு, ரஷிய அணுசக்தி நீர் மூழ்கி கப்பல் மூழ்கியது போன்ற சம்பவங்களையும் அவர் கணித்து கூறி இருந்தார்.  இரும்பு பறவைகள் மூலம் அமெரிக்காவில் கட்டிடங்கள் இடிக்கப்படும் என்றார். அவர் சொன்னது போல விமானத்தை விட்டு மோதி இரட்டை கோபுரத்தை தகர்த்தனர். விமானத்தை தான் அவர் இரும்பு பறவை என்று கூறி இருந்தார்.
 அதே போல “குர்ஸ்க்” தண்ணீரில் மூழ்க போகிறது என்று கூறி இருந்தார். அவர் சொன்னது போல ரஷிய நீர் மூழ்கி கப்பல் குர்ஸ்க் கடலில் மூழ்கியது. இனி வரும் ஆண்டுகளில் நடக்க போவதாக அவர் கூறும் விஷயங்கள் தான் நம்மை மிகவும் அச்சுறுத்தும் வகையில் இருக்கிறது.
 இந்த ஆண்டு நவம்பர் மாதம் 3-ம் உலகப் போர் மூளப் போகிறது, இந்த போர் 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை நடக்கும் ஆரம்பத்தில் அணு குண்டுகள் மூலம் தாக்குதல் நடக்கும். அடுத்து ரசாயன ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடக்கும் என்று கூறியுள்ளார். இந்த போரில் ஐரோப்பாவில் பெரும் பகுதி அழிந்து விடும். ரசாயன தாக்குதல் விளைவால் போருக்கு பிறகு மக்களுக்கு தோல் புற்றுநோய் ஏற்பட்டு பெரும் பாதிப்பு வரும் என்று அவர் கூறி இருக்கிறார்.
 நவம்பர் மாதத்துக்கு இன்னும் 1 மாதம்தான் இடைவெளி இருக்கிறது. அவர் கணித்தபடி போர் மூளுமா? இல்லையா? என்பது போக போகத்தான் தெரியும்.
 அதே போல இந்த ஆண்டு இறுதிக்குள் உலக தலைவர்கள் 4 பேரை கொல்ல முயற்சி நடக்கும் இதில் அவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.
 அமெரிக்க அதிபர் ஒபாமா, ரஷிய பிரதமர் புதின், ஜெர்மனி அதிபர் மார்கல், இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின், பிரான்சு அதிபர் சார்கோசி ஆகியோரில் இந்த 4 பேர் இருக்கலாம் என்று கருதப்படுகிது.
 2018-ம் ஆண்டு சீனா தான் உலகின் வல்லரசு நாடாக இருக்கும் என்றும் நாஸ்டர்டாம் கூறி இருக்கிறார்.
 2033-ல் இருந்து 2045 வரை துருவ பகுதி பனிக்கட்டிகள் பெருமளவு உருகும். இதனால் கடல் மட்டம் உயர்ந்து பல பகுதிகள் அழியும் என்றும் அவர் கணித்துள்ளார்.
 2046-ல் இருந்து 2070க் குள் மருத்துவ உலகில் பெரும் புரட்சி ஏற்படும். மனிதனின் எந்த உறுப்பையும் செயற்கையாக உருவாக்கி விடுவார்கள் என்றும் நாஸ்டர்டாம் சொல்லி இருக்கிறார்.
 இப்படி 5079 ம் ஆண்டு வரை பல்வேறு விஷயங்களை கணித்து கூறி இருக்கிறார். இறுதியாக 5079-ம் ஆண்டு உலகம் அழிந்து விடும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
Friday, September 3, 2010 | By: INDIA 2121

பங்குச் சந்தையிலும் மாதாந்திர முதலீட்டு திட்டம்

 மியூச்சுவல் பண்ட்களில் இருப்பதுபோல, இனி பங்குச் சந்தையிலும் மாதாந்திர முதலீட்டு திட்டம் அறிமுகமாகி உள்ளது.
இதை முதல்முறையாக நாட்டின் மிகப் பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐயின் துணை நிறுவனமான ஐசிஐசிஐ செக்யூரிடிஸ் அறிமுகம் செய்துள் ளது. மியூச்சுவல் பண்ட்களில் மொத்த முதலீடு, மாத தவணை முதலீடு என இரண்டு முறைகள் உள்ளன. முதலாவது முதலீட்டில் பங்குச் சந்தையின் சரிவின் போது நஷ்டம் அதிகம். மாதாந்திர முதலீட்டில் (எஸ்ஐபி) பங்குச் சந்தை சரிவின்போது அதிக யூனிட்கள் கிடைப்பதால், நஷ்டம் தவிர்க்கப்படுகிறது.
இதனால், 2வது முறைக்கு நடுத்தர, சிறு முதலீட்டாளர்களிடம் அதிக வரவேற்பு காணப்படுகிறது. பங்குச் சந்தையில் நேரடி முதலீட்டில் லாபம் அதிகம் என்ற போதிலும், திடீர் சரிவுகளால் நஷ்டமும் ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது. இதனால், சிறு, நடுத்தர முதலீட்டாளர்களின் முதலீடு குறைவாகவே உள்ளது.
பங்குச் சந்தை மீது எல்லா பிரிவினருக்கும் நம்பிக்கை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை இந்திய பங்கு வர்த்தக ஆணையமான ‘செபி’ எடுத்து வருகிறது. இந்நிலையில், மியூச்சுவல் பண்ட் போலவே பங்கு சந்தையிலும் மாதாந்திர தவணையில் முதலீடு செய்யும் திட்டம் தொடங்கியுள்ளது. ஐசிஐசிஐ செக்யூரிடிஸ் அளிக்கும் இந்த வசதியில், 2 வழிகள் உள்ளன.
மாதத்துக்கு குறிப்பிட்ட தொகை முதலீடு செய்வது முதல் வழி. அதன் குறைந்தபட்ச தொகை ரூ.750. 2வது வழியாக, மாதந்தோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பங்குகளை வாங்கலாம். மாதாந்திர முதலீட்டு திட்டத்தின் காலம் 2 ஆண்டுகள். பிறகு விரும்பினால் அதை நீட்டிக்கலாம் அல்லது பணத்தை திரும்பப் பெறவோ, பங்குச் சந்தையில் விட்டு வைக்கவோ செய்யலாம்.

அம்மா என்றால் அன்பு

 அம்மா. இந்த வார்த்தையை கேட்டால் நம்மைஅறியாமல் உற்சாகம் வரும். படுபாதக செயல் செய்கிறவன்கூட அம்மா முகத்தை பார்த்ததும் சாந்தமாகிவிடுவான். இதற்கு காரணம் என்ன? தாயின் மனநிலைக்கும் குழந்தையின் மூளை செயல்பாடுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? கனடாவின் டொரான்டோ பல்கலைக்கழகம், இங்கிலாந்தின் வின்செஸ்டர் பல்கலைக்கழகம் இணைந்து சமீபத்தில் இதுகுறித்து ஆய்வு நடத்தின. 35 வயதை ஒட்டியிருந்தவர்களை வைத்து ஆய்வு நடந்தது. அறிமுகம் இல்லாத சிலரது போட்டோக்கள் அவர்களிடம் காட்டப்பட்டன. அப்பா, அம்மாவின் போட்டோக்களும் காட்டப்பட்டன. அவற்றை பார்க்கும்போது மூளையில் அடையும் மாற்றம் எம்.ஆர்.ஐ. உதவியுடன் கண்காணிக்கப்பட்டது. அப்பா போட்டோ பார்ப்பதைவிட அம்மா போட்டோவை பார்க்கும்போது மூளையின் உணர்தல் மற்றும் உணர்ச்சி அதிகமானது. அதாவது, அம்மாவை பற்றிய தகவல்களை கேள்விப்படும்போது பல்பின் பிரகாசம்போல் மூளை பளிச்சென சுறுசுறுப்பாகிறது.
பிறந்த பிறகு முதல்முறை அழுவது, முதல் முறை பால் குடிப்பது, முதல் முறை சிரிப்பது, கத்துவது, நடப்பது, பேசுவது என எல்லாமே குழந்தைக்கு புதிய, த்ரில்லான அனுபவம்தான். இந்த ஒவ்வொரு சூழ்நிலையிலும் நமக்கு பக்கபலமாக இருந்த அம்மாவின் நினைவும் ஒவ்வொரு அனுபவத்திலும் அவள் நம்மை அரவணைத்துக் கொண்டதும் மூளையில் ஆழமாக பதிவாகிறது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த பதிவுகள் மறைவதில்லை. அதனால்தான், எத்தனை வயதானாலும் அம்மா என்றதும் மலர்ச்சி அடைகிறோம்.
கைக்குழந்தையை வளர்க்கும் காலக்கட்டத்திலும் அம்மா மகிழ்ச்சியாக இருக்க வேண்டியது அவசியம். டென்ஷனாக, கவலையாக இருந்தால் அது குழந்தையின் அறிவாற்றலை பாதிக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

செல்போனிலேயே எக்ஸாம் எழுதலாம்

 நாடு முழுவதும் கல்லூரி மற்றும் பள்ளிகளில் செல்போன்களுக்கு தடை விதிக்கப்பட்டு வரும் வேளையில் செல்போனில் தேர்வு எழுதும் முறையை பெங்களுரைச் சேர்ந்த தனியார் கல்வி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி செல்போன் கொண்டு வந்தால், அவற்றை பறிமுதல் செய்வதுடன் பெற்றோரை அழைத்தும் அறிவுறுத்துகின்றனர்.
இந்நிலையில் பெங்களுரைச் சேர்ந்த சேஷாத்ரிபுரம் பர்ஸ்ட் கிரேடு என்ற ஆர்ட்ஸ் கல்லூரியில் செல்போன் மூலம் தேர்வு எழுதும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் தேர்வு எழுதுவது பல வெளிநாடுகளில் பழக்கத்தில் உள்ளது. தற்போது கம்ப்யூட்டரில் உள்ள தகவல் தொடர்பு வசதிகள் கையடக்க செல்போனிலும் வந்துவிட்டதால் ஆன்லைனில் செய்யக்கூடிய அனைத்தையும் செல்போனிலேயே செய்ய முடியும்.
சேஷாத்ரிபுரம் கல்லூரியில் முதல் கட்டமாக பிபிஎம் மற்றும் பிசிஏ படிப்புகளில் இந்த செல்போன் தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி தேர்வு நடைபெறும் நாளன்று வகுப்பறையில் இருக்கும் மாணவர்களிடம் பேப்பர்களுக்கு பதிலாக ஒரே மாதிரியான செல்போன் தரப்படும். இதில் கேம்ஸ் மற்றும் மெசேஜ் வசதி இருக்காது. இந்த செல்போன்கள் அனைத்தும் கம்ப்யூட்டர் சர்வருடன் இணைக்கப்பட்டிருக்கும். மாணவரின் பெயரை செல்போனில் பதிவு செய்தவுடன் சர்வருடன் இணைப்பு கிடைக்கும். கேள்வித்தாள் செல்போன் திரையில் தோன்றும். அப்ஜக்டிவ் முறையில் இந்தக் கேள்விகளுக்கு சரியான பதிலை ‘டிக்’ செய்ய வேண்டும். அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்தவுடன் தேர்வை முடித்துக் கொள்கிறோம் என்பதற்கான பட்டனை அழுத்த வேண்டும். உடனடியாக அவரது விடைத்தாள் கல்லூரி சர்வரில் சரிபார்க்கப்பட்டு மதிப்பெண் தரப்படும். இந்த முறையில் பேப்பர் செலவு மிச்சம். ஆசிரியர்களுக்கு விடைத்தாள் திருத்த வேண்டிய வேலை மிச்சம். புதிய முறையில் தேர்வு என்பதால் மாணவர்களும் தேர்வை கண்டு பயப்படாமல் உற்சாகமாக தேர்வை எழுதுவார்கள்.
இது குறித்து கல்லூரி முதல்வர் எம்.பிரகாஷ் கூறுகையில், “தரமான கல்வியை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த திட்டத்தை தொடங்கினோம். மாணவர்கள் மத்தியில் இந்த திட்டத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளது. மேலும் இதில் காப்பி அடிப்பதற்கான வாய்ப்பு இல்லை என்றார். விடைத்தாள் திருத்தும் வேலை இல்லாததால் ஆசிரியர்களும் இந்த திட்டத்துக்கு அமோக வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மாணவர்களின் வருகைப்பதிவுக்கும் இந்த செல்போன்கள் பயன்படுத்தப்படுகிறது. மாணவர்கள் வகுப்பறைக்கு வந்தவுடன் செல்போனில் உள்ள குறிப்பிட்ட பட்டனை அழுத்தினால் வருகை பதிவாகிவிடும். கல்லூரிக்கு மாணவர் வரத் தவறினால் உடனடியாக கல்லூரியின் சர்வரிலிருந்து மாணவரின் பெற்றோருக்கு எஸ்எம்எஸ் சென்றுவிடும். இதனால் மாணவர்கள் கல்லூரிக்கு மட்டம் போட முடியாது. அட்டன்டெண்ஸ் எடுக்க வேண்டிய வேலையும் ஆசிரியர்களுக்கு இல்லை.
Monday, August 30, 2010 | By: INDIA 2121

இந்திய வங்கிகளில் மோசடி 2,000 கோடியை தாண்டியது

 கடந்த 2009 - 10ம் நிதியாண்டில் நாடு முழுவதும் வங்கிகளில் 24,797 மோசடிகள் நடந்துள்ளன. மோசடி தொகை 2,000கோடியை தாண்டியது.
கடந்த 2009 - 10ம் ஆண்டுக்கான ரிசர்வ் வங்கியின் வருடாந்திர அறிக்கையில் இது பற்றி கூறப்பட்டு இருப்பதாவது:
கடந்த 2005 - 06ம் ஆண்டில் 13,914 வங்கி மோசடிகள் நடந்தன. மொத்த மோசடி தொகை
1,381 கோடி. ஆனால், 2009 - 10ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 24,797 ஆகவும், மோசடி தொகை2,017 கோடியாகவும் அதிகரித்துள்ளது. 2008  - 09ம் ஆண்டில் நடந்த வங்கி மோசடிகளின் எண்ணிக்கை 23,914. மொத்த மோசடி தொகை1,883 கோடி.
2009 - 10ம் நிதியாண்டில் நடந்த மொத்த மோசடிகளில் 1கோடிக்கும் மேற்பட்ட மதிப்புள்ள மோசடிகளின் எண்ணிக்கை 225. இதில் சம்பந்தப்பட்ட தொகை 1,524 கோடி. இதற்கு முந்தைய ஆண்டில் இந்த எண்ணிக்கை 212 ஆகவும், தொகை 1,404 கோடியாகவும் இருந்தது. வங்கிகள், இதற்கு முன்பு செய்ததைப் போலவே இந்த மோசடிகள் சம்பந்தமாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாடு முழுவதும் புழக்கத்தில் இருக்கும் மற்றும் கண்டு பிடிக்கப்பட்ட கள்ள நோட்டுகளின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்து இருக்கிறது. 2009 - 10ம் ஆண்டில் 4,01,476 கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. 2008 - 09ல் கண்டு பிடிக்கப்பட்ட கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை 3,98,111. அதற்கு முந்தைய ஆண்டின் எண்ணிக்கை 1,95,811. கடந்த நிதியாண்டில் கண்டு பிடிக்கப்பட்ட கள்ள நோட்டுகளில் 86.9 சதவீதம் வங்கிகளால் கண்டு பிடிக்கப்பட் டவை. மற்றவை ரிசர்வ் வங்கியால் கண்டு பிடிக்கப்பட்டன. புழக்கத்தில் உள்ள கள்ள நோட்டுகளின் எண்ணிக்கையும் மிக அதிகமாக இருக்கக்கூடும்.
கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகரித்து இருப்பதால் அவை கள்ளநோட்டுகள் என்பது தெரியாமலேயே பொதுமக்களின் கைக்கு கிடைத்து அவர்கள் அதை வங்கிலேயோ அல்லது வர்த்தக நிறுவனங்களிலேயோ கொடுக்கக் கூடும். அப்படி, தெரியாமல் வாங்கி வங்கி கவுண்டர்களில் கொடுக்கும்போது 5 நோட்டுகள் வரை மட்டும் இருந்தால், அந்த நோட்டுகளை முடக்கி வைத்து விட்டு அதற்கான ரசீதை அந்த நபருக்கு வங்கிகள் கொடுக்க வேண்டும். இதுபோன்ற சந்தர்ப்பத்தில் அந்த நபருக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்யத் தேவையில்லை. ஆனால், அந்த நபர்களின் அடையாளத்துக்கான அத்தாட்சியை வாங்கி வைக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Friday, August 27, 2010 | By: INDIA 2121

கசக்குதே அமெரிக்கா.. இனிக்குதே இந்தியா

 அமெரிக்க மோகத்துடன் சென்ற இந்தியர்கள் தங்களது வேலை, கைநிறைய சம்பளம் போன்றவற்றை மூட்டை கட்டிவிட்டு குடும்ப உறவுக்கும், பாசத்துக்கும் ஏங்கி தாய் நாடு திரும்பும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன.
‘என் மகள் அமெரிக்காவில் டாக்டராக இருக்கிறாள்’, ‘மகன் இன்ஜினியராக இருக்கிறான்’ என்று சொல்வதை பெருமையாக கருதுகிறவர்கள் அந்தக்காலம் தொட்டு இந்த காலம் வரை இருக்கிறார்கள். பல இளைஞர்கள், இளைஞிகளின் கனவும் அமெரிக்கா செல்வதாகவே இருக்கிறது. ஆனால் இப்போது நிலைமை தலைகீழாகி வருகிறது. ஆண்டுக்கணக்கில் அங்கு இயந்திரமயமான வாழ்க்கையில் உழன்ற பலர் உறவு, பாசம், கலாசாரம் என்று பேச ஆரம்பித்திருக்கிறார்கள். தாய்நாட்டு பிணைப்பை இழந்து விட்டது போல் உணருகின்ற பலரும் அவசர அவசரமாக ஊர் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.
1990ம் ஆண்டு தனது 23ம் வயதில் ஐதராபாத்திலிருந்து அமெரிக்கா சென்றவர் கவுதம். பட்ட மேற்படிப்பு, மல்ட்டிநேஷனல் ஐ.டி. கம்பெனியில் உயர் பதவி, கைநிறைய சம்பளம், அமெரிக்க சிட்டிஷன்சிப்புடன் பிறந்த குழந்தை என கடந்த 18 வருடமாக அமெரிக்கவாசியாகவே வாழ்ந்தார். அந்த வாழ்க்கைக்கு குட்பை சொல்லிவிட்டு திடீரென சொந்த ஊர் திரும்பினார். அண்ணன், அண்ணி, மாமா, அத்தை, சித்தப்பா, சித்தி என உறவுகளோடு வந்து கண்ணீரோடு கலந்து விட்டார்.
“பையை நிரப்பும் காசைவிட குடும்ப உறவுகள்தான் நம் மனதை ஆள்கிறது. சதா ஊர் ஞாபகம் வருகிறது. எவ்வளவுதான் பணம் இருந்தாலும் ஊரில் இந்நேரம் நம் உறவுகள் என்ன செய்யும்? அவளுக்கு கல்யாணமாமே.. இவருக்கு குழந்தை பிறந்திருக்கிறதாமே.. என்ற தகவல்கள் ஏதோ ஒருவகையில் நாம் அங்கு இல்லாததை ஒரு இழப்பாக கருதச் செய்கிறது. பணம்தான் முக்கியம் என்று நினைத்தால் அதை இப்போது இந்தியாவிலேயே சம்பாதிக்கலாம். அதனால் நான் இந்தியா திரும்பிவிட்டேன்” என்கிறார் கவுதம்.
அமெரிக்காவில் மார்பக அறுவை சிகிச்சை நிபுணராக புகழ்பெற்றவர் டாக்டர் பி.ரகுராம். வசதி, வாய்ப்புகள் குவிந்தது. ஆனால் கடந்த 2007ம் ஆண்டு திடீரென்று இந்தியா திரும்பினார். ‘இந்தியாவில் அர்ப்பணிப்புடன் சேவை வழங்கும் மார்பக அறுவை சிகிச்சை மையங்கள் இல்லை என்று உணர்ந்தேன். அந்த சேவையை நம் மக்களுக்கு வழங்கும் லட்சியத்துடன் ஊர் திரும்பி விட்டேன். என் தாயார் பெயரில் மருத்துவமனை தொடங்கி 3 ஆண்டுகள் ஆகிறது. இதன் மூலம் முழு திருப்தி கிடைத்திருக்கிறது” என்றார்.
அதேபோல் ஐதராபாத்தை சேர்ந்த டாக்டர் பிரமதி ரெட்டி (அப்பல்லோ மருத்துவமனை சீனியர் கன்சல்டன்ட்) கூறும்போது, “13 ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ்ந்து தம்பா, புளோரிடா பகுதிகளில் மருத்துவ தொழில் செய்தேன். அதை விட்டுவிட்டு இந்தியா திரும்பிவிட்டேன். நமது கலாசாரம், குடும்ப பந்தம், பாசங்கள் நிறைந்த உறவுக்கான சூழ்நிலையில் எனது குழந்தையை வளர்ப்பதற்காக ஊர் திரும்பினேன்” என்றார்.
டாக்டர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் இன்ஜினியர்கள், இந்தியா திரும்பினால் நிறைய சம்பாதிக்க முடியாது என்ற எண்ணம் கொண்ட உயர் அதிகாரிகள், வசதியான வாழ்க்கை இந்தியாவில் கிடைக்காது என்று எண்ணுபவர்கள்கூட மீண்டும் இந்தியா திரும்பும் எண்ணத்தில் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
அமெரிக்காவில் வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் பல தொழில் அதிபர்களும், “அங்குள்ள மார்க்கெட் நிலவரம் மங்கி வருகிறது. இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி அதிகரித்து வருகிறது. எல்லாவற்றையும் தாண்டி தாய் மண்ணுக்கான வீரியம் எங்கிருந்தாலும் அதிகரித்து வருகிறது என்று கூறி தங்கள் தொழிலுக்கு குட்பை சொல்லிவிட்டு இங்கு வந்து வர்த்தகத்தை தொடங்கிவிட்டனர்.
நிதிமுதலீடு தொழில் நடத்தி வந்த மம்தா பானர்ஜி கூறும்போது, “18 வருடம் அமெரிக்காவில் நிறுவனம் நடத்தி வந்தேன். இப்போது அதற்கு மூடுவிழா நடத்திவிட்டு இந்தியா திரும்பி, இங்கே கம்பெனி தொடங்கி விட்டேன். மைக்ரோ சாஃப்ட் துறையில் புகழ்பெற்று விளங்கும் எனது கணவரும் தனது டீமுடன் இந்தியா திரும்பி நிறுவனத்தை தொடங்கி விட்டார். அமெரிக்காவில் இந்தியர்கள் மத்தியில் இப்படியொரு மனமாற்றம் வேகமாக வளர்ந்து வருகிறது” என்றார்.

‘மப்பில்’ இருந்தால் பைக் ஸ்டார்ட் ஆகாது

 தண்ணியடித்து விட்டு போதையில் இருந்தால் பைக், கார் ஸ்டார்ட் ஆகாது. இதற்கான பிரத்யேக கருவியை கோவை இன்ஜினியர் கண்டுபிடித்துள்ளார்.
கோவை கல்வீரம்பாளையம் நால்வர் நகரை சேர்ந்தவர் முத்துக்குமார் (27). பி.இ. எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் படித்தவர். 2004&ம் ஆண்டில் முத்துக்குமார் கண்டுபிடித்த ‘ஆட்டோமேட்டிக் ரூம் கன்ட்ரோலர்’ என்ற கருவிக்கு போபாலில் உள்ள தி இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியர் அமைப்பு தங்கப்பதக்கம் வழங்கியது. பூட்டை உடைத்து திருடர்கள் வீட்டுக்குள் வந்தால், இந்தக் கருவி சத்தமிடுவதுடன் தானாக அனைத்து விளக்குகளையும் எரிய வைக்கும். இதனால் திருட்டை தவிர்க்கலாம். இதேபோல பல கருவிகளை இவர் கண்டுபிடித்துள்ளார்.
தற்போது, ‘டிரங் அண்ட் டிரைவ் கன்ட்ரோல் சிஸ்டம்’ என்ற புதிய கருவியை கண்டுபிடித்துள்ளார். குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை தடுக்க இந்தக் கருவி பயன்படும். இதை பைக், கார்களில் டேஸ் போர்டு இருக்கும் இடத்தில் பொருத்த வேண்டும். கருவி சீல் வைக்கப்பட்டிருப்பதால் எலக்ட்ரிக் அமைப்பை கழற்றி மாற்ற முடியாது.
டிரைவர் சீட்டில் அமர்ந்தவுடன் கருவியிலுள்ள ஆல்கஹால் சென்சார், தானாக செயல்படும். வாகனம் ஓட்டுபவர் குடித்து இருந்தால் ‘மன்னிச்சிடுங்க பாஸ்... நீங்க மது குடிச்சிருக்கீங்க... உங்களால வண்டி ஓட்ட முடியாது’ என்று எச்சரிக்கை வரும். மது குடிக்காவிட்டால், டிஸ்பிளேவில் 3 இலக்க எண் தோன்றி மறையும். அந்த எண்ணை நம்பர் பட்டனில் அழுத்த வேண்டும். அந்த எண்ணுடன், ஓட்டுபவரிடம் உள்ள ரகசிய எண்ணை சேர்த்து அழுத்தினால் வாகனம் ஸ்டார்ட் ஆகும். வாகனத்தை ஸ்டார்ட் செய்த பிறகு மது குடித்தால் 30 வினாடியில் கண்டுபிடித்து வாகனம் தானாக நின்றுவிடும். ‘மத்திய, மாநில அரசுகள், வாகன உற்பத்தியாளர்கள் உதவினால், இந்தக் கருவியை ஒவ்வொரு வாகனங்களிலும் பொருத்தி, விபத்துகளை தடுக்க முடியும்’ என்கிறார் முத்துக்குமார்.
Wednesday, August 25, 2010 | By: INDIA 2121

உயிருக்கு ஆபத்தாகும் மருந்து, மாத்திரைகள்

 டாக்டர்கள் பரிந்துரை சீட்டு இல்லாமல் தானாகவே கடைகளுக்கு சென்று மருந்து, மாத்திரைகளை வாங்கி உட்கொள்வதால், ஏதாவது பக்க விளைவுகள், பாதிப்புகள் ஏற்பட்டால், அதற்கு பொதுமக்கள் தான் முழு பொறுப்பு. ஏனென்றால், என்ன மருந்து, மாத்திரைகள் உட்கொண்டோம் என்பதற்கு ஆதாரமாக டாக்டர்கள் பரிந்துரை சீட்டு இருக்காது. அதனால், யாரையும் குறை சொல்ல முடியாது.
டாக்டர்கள் பரிந்துரைத்த மருந்து, மாத்திரைகளை முறையாக சாப்பிடாமல், தேவையற்ற மருந்து, மாத்திரைகளை சாப்பிடுவதால், வீரியம் மிக்க மருந்துகளுக்கும் கட்டுப்படாத கிருமிகள் பரவி வருகின்றன. இந்த கிருமிகளை கட்டுப்படுத்தவும் முடியவில்லை. அழிக்கவும் முடியவில்லை. டிபி, என்டிஎம் பாக்டீரியா, இதுபோன்ற கிருமிகளில் ஒன்றாகும். இந்தியா மட்டுமல்ல; பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்பிரிக்கா நாடுகளிலும் இந்த கிருமிகள் பரவி வருகின்றன. 
         தலை வலி, ஜலதோஷம், இருமல், காய்ச்சல் போன்றவைகளுக்கான மருந்து, மாத்திரைகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நேரடியாக விளம்பரம் செய்கின்றன. அதை பார்க்கும் மக்கள், அதுபோன்ற பிரச்னைகள் ஏற்படும்போது அந்த மருந்து, மாத்திரைகளை வாங்குகின்றனர்.
குழந்தைகள் காய்ச்சல், சளி, இருமல் என்று பாதிக்கப்பட்டால் உடனடியாக தாய்மார்கள் பாராசிட்டமால் மருந்து, மாத்திரைகளை அதிகமாக கொடுக்கின்றனர். மேலும், சொட்டு மருந்திற்கும், டானிக்கிற்கும் (சிரப்) வித்தியாசம் தெரிவதில்லை. சொட்டு மருந்தை 3 சொட்டு கொடுக்க வேண்டும், டானிக் ஒரு ஸ்பூன் தர வேண்டும் என்று டாக்டர்கள் கூறுகின்றனர். ஆனால், டானிக் அளவிற்கு, சொட்டு மருந்தை கொடுத்து விடுகின்றனர். டாக்டரின் ஆலோசனை இல்லாமல், டானிக், பாரசிட்டமாலை அதிகமாக கொடுப்பதால் குழந்தைகளின் கல்லீரல், சிறுநீரகம் பாதிக்கப்படும். 
       நாம் உட்கொள்ளும் மருந்து, மாத்திரைகள் ஜீரண மண்டலத்திற்கு சென்று சிறுகுடல், பெருகுடல் வழியாக நோய்களுக்கு தீர்வு காண்கிறது. அதன்பின், கடைசியாக கல்லீரல் வந்தடைகிறது. அதையடுத்து மருந்து, மாத்திரைகள் கரைந்து சிறுநீராக வெளியேறுகிறது. கல்லீரல், சிறுநீரகம் செயல்பாட்டை அறிந்து, உடல் எடையை கணக்கிட்டு, டாக்டர்கள் மருந்து மாத்திரைகளை எழுதிக் கொடுப்பார்கள். டாக்டர்கள் பரிந்துரைத்ததை விட கொஞ்சம் கூடுதலாக சாப்பிட்டாலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
ஆனால், டாக்டர்களின் ஆலோசனை இல்லாமல் நேரடியாக வாங்குகின்றனர். அந்த மருந்தின் பக்க விளைவுகள் தெரிவதில்லை. எவ்வளவு டோஸ் உட்கொள்ள வேண்டும் என்றும் தெரிவதில்லை.
இதனால், முதலில் கல்லீரல் செயலிழக்கும், அதன்பின் சிறுநீரகம் என படிப்படியாக ஒவ்வொரு உறுப்பாக பாதிக்கப்பட்டு, கடைசியாக உயிருக்கே ஆபத்தாக அமையும். படித்தவர்கள் மற்றும் மருந்து, மாத்திரைகளை பற்றி அறைகுறையாக தெரிந்தவர்கள்தான், டாக்டரின் ஆலோசனை இல்லாமல் தானாகவே மருந்து, மாத்திரைகளை வாங்குகின்றனர். 
        தமிழக மருந்து கட்டுப்பாட்டுத் துறை இயக்குனர் பாஸ்கரன் கூறுகையில், “மருந்து கடைக்காரர்கள் வலிகளை நீக்கும் மாத்திரை, நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை, மயக்க மருந்து, தூக்க மாத்திரை போன்ற பட்டியலில் உள்ள மருந்துகளை டாக்டர்கள் சீட்டு இல்லாமல் பொதுமக்களுக்கு கொடுக்க அனுமதியில்லை. சாதாரண காய்ச்சல், தலைவலி, சளி, இருமல் போன்ற மருந்து, மாத்திரைகளை விற்கலாம். அதுவும் அளவுக்கு அதிகமாக கொடுக்க அனுமதி இல்லை” என்றார்.

ஆனந்த் இந்திய குடிமகனா வெளிநாட்டு பிரஜையா’

 எப்போதும் சண்டை சச்சரவுடன் வாழும் மக்கள், எதிரி நாடு போர் தொடுத்தால் ஒற்றுமையாகி விடுவார்கள். அப்படி யாரும் உதவிக்கு வராத பட்சத்தில் உள்நாட்டிலேயே எவராவது அந்த பொறுப்பை சுமக்க வேண்டியிருக்கிறது.
விஸ்வநாதன் ஆனந்த் விவகாரத்தில் மனிதவள மேம்பாடு துறை அதிகாரி ஒருவருக்கு அத்தகைய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கணித மாநாட்டை முன்னிட்டு ஆனந்துக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க ஹைதராபாத் பல்கலைக்கழகம் தீர்மானித்தது. மத்திய பல்கலை என்பதால் மத்திய அரசின் ஒப்புதல் தேவை. அதை கேட்டதற்கு, ‘ஆனந்த் இந்திய குடிமகனா வெளிநாட்டு பிரஜையா’ என்று சந்தேகம் கிளப்பி மொத்த பேருக்கும் ஒரே நேரத்தில் ரத்தக் கொதிப்பை ஏற்படுத்தி விட்டார் அதிகாரி.
‘ஆனந்த் இந்தியன் இல்லை என்றால் வேறு யாருக்கு அந்த தகுதி இருக்கிறது’ என்ற கேள்வியில் தொடங்கி, ‘பச்சைத் தமிழனை அந்நியனா என கேட்ட அதிகாரியை டிஸ்மிஸ் செய்’ என்பதுவரை இணையதளத்தில் சர்வதேச இந்தியர்களின் ஆவேசம் தெறிக்கிறது. சதுரங்க உலகின் சக்கரவர்த்தி, செஸ் ஆட்டத்தின் மூன்று வடிவங்களிலும் உலக சாம்பியன் பட்டத்தை வென்ற ஒரே மனிதன், பத்ம விபூஷன் விருது பெற்ற முதல் விளையாட்டு வீரன், ஒவ்வொரு வெற்றிக்காகவும் நாடாளுமன்றத்தால் வாழ்த்தப்படும் மகத்தான இந்தியன் ஆனந்த். மாயவரத்தில் பிறந்து சென்னையில் வளர்ந்து உலகை வென்றவர் இன்று ஸ்பெயினில் வசிக்கிறார். வசிப்பிடத்தால் குடியுரிமை மாறுவதில்லை. அவரது பாஸ்போர்ட் மீது அசோக சக்கர முத்திரைதான் மின்னுகிறது.
இதெல்லாம் தவிர, கவுரவ பட்டத்துக்கும் குடியுரிமைக்கும் சம்பந்தமே கிடையாது. இந்திய தலைவர்களுக்கு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களும் நமது நிறுவனங்கள் வெளிநாட்டு பிரமுகர்களுக்கும் கவுரவ பட்டங்கள் வழங்குவது வழக்கமான நடைமுறை. அப்படி இருக்கும்போது ஒரு அரசு அதிகாரிக்கோ பல்கலைக்கழக நிர்வாகிக்கோ இப்படியொரு சந்தேகம் எழுந்ததே புதிராக இருக்கிறது.
பக்கத்து நாடுகளில் இருந்து சட்ட விரோதமாக வந்து வசிப்பவர்களுக்கு குடியுரிமையும் சலுகைகளும் கொடுத்து வாழவைக்கும் அதிகார வர்க்கத்துக்கு சொந்த நாட்டு குடிமகன் விளையாட்டு உலகின் தலைமகன்  அந்நியனாக தெரிவது கடைந்தெடுத்த அநியாயம்.

சென்னையில் இறக்குமதியாகும் ஆபத்து

 சென்னை நகரை எலக்ட்ரானிக் குப்பை மேடாக்க ஒரு கூட்டமே கிளம்பியிருக்கிறது. இ-வேஸ்ட் அல்லது இ-ஸ்கிராப் என்று சொல்லப்படும் மின்னணு கழிவுகள்.
டெலிபோன், கம்ப்யூட்டர், டெலிவிஷன், கால்குலேட்டர், வாஷிங் மெஷின், ரேடியோ, டியூப்லைட், ஃபிரிட்ஜ், பொம்மை, பேட்டரி, டிவிடி பிளேயர்.. மின்சாரத்தில் இயங்கும் சாதனங்கள் எதுவானாலும் செயலற்று போனால் இ - ஸ்கிராப். அமெரிக்காவில் ஓராண்டில் 3 கோடி கம்ப்யூட்டர் 10 கோடி டெலிபோன் இப்படி கழிக்கப்படுகிறது. முழுவதும் செயல் இழந்திருக்கலாம் அல்லது காலாவதி ஆகியிருக்கலாம். ரிப்பேருக்கு அழுவதைவிட புதிதாக வாங்குவது சுலபம் என்பதால் இப்படி.
இந்த சாதனங்களில் பல பாகங்கள் மறுசுழற்சி முறையில் புதுப்பிக்க கூடியவை. தங்கம், வெள்ளி, பிளாட்டினம் போன்ற விலை உயர்ந்த உலோகங்களும் விலை குறைந்த இரும்பு, அலுமினியம் போன்றவையும் இவற்றில் இருக்கின்றன. உடலுக்கும் சூழலுக்கும் கேடு உண்டாக்கும் நச்சு சமாசாரங்களும் உள்ளன. குழி தோண்டி புதைத்தாலும் நிலத்தையும் நிலத்தடி நீரையும் விஷமாக்கும் வீரியம் கொண்டவை இந்த பொருட்கள்.
இவற்றை கப்பல் கப்பலாக சென்னைக்கு ஏற்றுமதி செய்கின்றன பல நாடுகள். எரியாத டியூப்லைட், செத்த பேட்டரி பொறுக்கி உடைத்து ஈயம், பித்தளை சுரண்டி சேகரிக்கும் பழக்கம் இருப்பதால் இங்குள்ள சில வியாபாரிகள் ஆபத்தான அந்நிய கழிவுகளை வரவழைத்து கொள்ளை லாபம் பார்க்கின்றனர். இதனால் நிலம், நீர், காற்று மாசு படுவதுடன் எண்ணற்ற நோய்களும் பரவும் என்பதை அவர்கள் மறைக்கின்றனர். மூன்று நாள் முன்பு 4 நாடுகளில் இருந்து 8 கன்டெய்னர்களில் வந்த 127 டன் கழிவுகளை சென்னை கஸ்டம்ஸ் அதிகாரிகள் கைப்பற்றினர். மூன்று மாதத்தில் இது ஐந்தாவது சம்பவம்.
கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தும் இவ்வாறு தொடர்ந்து நடப்பது புதிராக இருக்கிறது. எலக்ட்ரானிக் சாதனங்கள் பயன்பாடு வேகமாக அதிகரிக்கும் நிலையில், இங்கு இ-வேஸ்ட் அதிகரிக்காமல் தடுக்க வேண்டிய நெருக்கடி நமக்கு இருக்கிறது. இந்த லட்சணத்தில் கூடுதல் ஆபத்தை இறக்குமதி செய்யும் ஆசாமிகள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தால் மட்டுமே விழிப்புணர்வு ஏற்படும்.
Monday, August 23, 2010 | By: INDIA 2121

முகேஷை பின்னுக்கு தள்ளி நம்பர் ஒன் கோடீஸ்வரர் ஆகிறார் அனில்

 நாட்டின் நம்பர் 1 பணக்காரர் பட்டியலில் நீண்ட காலமாக இருந்து வரும் ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, முதல் முறையாக 2வது இடத்துக்கு இறங்குகிறார். முதலிடத்தை வேதாந்தா குழும தலைவர் அனில் அகர்வால் விரைவில் பிடிக்கிறார்.
உலோகங்கள், சுரங்கங்கள் துறையில் உலக அளவில் முன்னணி வகிக்கிறார் வெளிநாடு வாழ் இந்தியரான அனில் அகர்வால். அவரது வேதாந்தா குழுமம் கெய்ர்ன் இந்தியா நிறுவனத்தை 44,200 கோடிக்கு வாங்க ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே வேதாந்தா குழும நிறுவனங்களில் அனில் அகர்வால் குடும்பத்தினரின் பங்குடன், கெய்ர்ன் இந்தியாவில் அவரது பங்குகளும் சேர்ந்தால் மொத்த மதிப்பு 1.67 லட்சம் கோடியாக உயர்கிறது.
இது ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் மொத்த பங்கு மதிப்பான 1.45 லட்சம் கோடியை விட அதிகம். எனவே, இதுவரை நாட்டின் முன்னணி பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த முகேஷ், விரைவில் 2வது இடத்துக்கு வருகிறார். அனில் அகர்வால் முதலிடம் பிடிக்கிறார். இது அனில் அம்பானியின் மொத்த பங்கு மதிப்பான 80,000 கோடியைவிட 2 மடங்கு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் ஏழைகள் எண்ணிக்கை 82.5 கோடி

 இந்தியாவில் மாதத்துக்கு ஒருவரது வருமானம் 1,035க்குகீழ் இருப்பவர்கள் எண்ணிக்கை 82.5 கோடி என்று ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது. இந்த பிரிவினரை ஏழைகளாக அது பட்டியலிட்டுள்ளது.
இதுபற்றி ஆசிய வளர்ச்சி வங்கி (ஏடிபி) வெளியிட்டுள்ள புள்ளிவிவர அறிக்கை வருமாறு:
இந்தியாவில் நடுத்தர வருமான பிரிவினர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இது உலக பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது. எனினும், நடுத்தர பிரிவினரில் பெரும்பகுதியினரின் தனிநபர் மாத வருமானம் 1,035 முதல் 2,070
ஆக உள்ளது. குடும்பத்தில் ஒவ்வொருவரின் சராசரி மாத வருமானம் இதுவாக இருப்பவர்கள் எண்ணிக்கை 22.4 கோடி. இவர்களை கீழ்நிலை நடுத்தர மக்கள் (லோயர் மிடில் கிளாஸ்) எனலாம்.
அடுத்ததாக,2,070 முதல் 5,177 வரை மாத தனிநபர் வருமானம் கொண்டவர்கள் 4.5 கோடி பேர் உள்ளனர். இவர்கள் நடுத்தர மிடில் கிளாஸ் பிரிவினர். 
மாதத்துக்கு ஒருவர் 5,177 முதல் 10,354 வரை வருமானம் சம்பாதித்தால் அவர்கள் உயர் நடுத்தர வருமான பிரிவினராக (அப்பர் மிடில் கிளாஸ்) கருதப்படுகின்றனர். இவர்களது எண்ணிக்கை 50 லட்சம் மட்டுமே.அதற்கும் மேலாக மாதத்துக்கு 10,354 மேல் வருமானம் சம்பாதிப்பவர்கள் பணக்கார பிரிவில் உள்ளனர். அதாவது, ஒரு குடும்பத்தில் 4 பேர் இருந்து, மொத்த மாத வருமானம் 41,416க்கு மேல் இருந்தால் அவர்கள் பணக்கார பிரிவினர். இதேபோல, ஏழைகள், நடுத்தர மக்களும் கணக்கிடப்பட்டுள்ளனர்.
எனினும், ஆசிய நாடுகளில் லோயர் மிடில் கிளாஸ் மக்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.
Saturday, August 21, 2010 | By: INDIA 2121

நிலவு சுருங்கி வருகிறது

 நிலவு சுருங்கி வருகிறது.. அதன் அளவில் இனி அதிகரிக்க வாய்ப்பு இல்லை’ என்று வானவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
அமெரிக்காவின் ஸ்மித்சோனியன் இன்ஸ்டிடியூசனைச் சேர்ந்த விஞ்ஞானிகளின் அரிய கண்டுபிடிப்பு இது. நிலவின் மேற்பரப்பில் ஏற்பட்டுள்ள கீறல்களை வைத்தே நிலவு சுருங்குவதை கண்டுபிடித்ததாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
நிலவின் உட்பகுதியில் குறைந்து வரும் வெப்பநிலை காரணமாக அப்பகுதி சுருங்குகிறது. உட்பகுதி சுருங்குவதால் அந்த பருமனுக்கேற்ப மேற்பகுதியிலும் சுருக்கம் ஏற்படுகிறது. இதன் காரணமாக கீறல்கள் ஏற்படுகின்றன. கடந்த காலங்களை ஒப்பிடும் போது சமீப காலங்களில் இந்த கீறல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்கிறார்கள் விஞ்ஞானிகள். மேலும் இந்த சுருக்கம் சட்டென நிகழவில்லையாம். பல பில்லியன் ஆண்டுகள் ஆகியிருக்கிறது.
நிலவின் சுருக்கம், மெல்ல மெல்ல காற்றிறங்கும் பலூன் போல இருக்கிறதாம். மேலும் நிலவின் வெப்பநிலை குறைவு காரணமாக இதுவரை அதன் ஆரம் 100 மீட்டர் வரை சுருங்கி விட்டது என்று கூறுகிறார் ஸ்மித்சோனியன் இன்ஸ்டிடியூசனைச் சேர்ந்த தாமஸ் வாட்டர். நிலவின் மேற்பரப்பை காட்டும் புகைப்படங்களை ஆய்வு செய்து, நிலவின் உயர்ந்த பரப்பில் இந்த கீறல்கள் ஏற்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளனர் விஞ்ஞானிகள். இந்த கீறல்களை ‘லோபேட் ஸ்கார்ப்ஸ்’ என்கிறார்கள். 1970களில் எடுக்கப்பட்ட நிலவின் மேற்பரப்பு படங்களிலும் இதே கீறல்கள் இருந்தன. ஆனால் தற்போது ‘நாசா’ எடுத்த படங்களில் 14 புதிய கீறல்கள் ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதை வைத்தே நிலவு சுருங்கும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
‘சுருக்கத்தால் நிலவு முழுக்க மறைந்து விடப் போவதில்லை. அதேசமயம் அளவில் அதிகரிக்கும் வாய்ப்பு கிடையாது. இதனால் பூமிக்கும் ஆபத்து வராது’ என்று கூறுகிறார் தாமஸ் வாட்டர்.
Friday, August 20, 2010 | By: INDIA 2121

வங்கி கணக்கில் மோசடி - உஷார்

 வங்கி வாடிக்கையாளர்களிடம் புதிய வழியில் செல்போன் மூலம் மோசடி நடைபெறுவதாக மும்பை போலீசார் எச்சரித்துள்ளனர். இது மற்ற நகரங்களுக்கும் பரவுவதால் சென்னை உட்பட மாநகர மக்களை வங்கிகள் உஷார்படுத்தியுள்ளன.
வங்கிகள், போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
திடீரென யாருக்காவது மோசடி பேர்வழியிடம் இருந்து செல்போனில் அழைப்பு வரும். வங்கியில் இருந்து பேசுகிறேன். உங்கள் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது (பொதுவாக,20,000க்குமேல்) என்று கூறுவார் பலே கில்லாடி. கிரடிட் கார்டு மோசடி நடந்திருக்கலாம் என்று பதறுவார் வாடிக்கையாளர். இணைப்பு துண்டிக்கப்படும். மேற்கொண்டு விவரம் அறிய அதே செல்போன் எண்ணுக்கு வாடிக்கையாளர் தொடர்பு கொள்வார். ‘உங்கள் கணக்கில் மேலும் திருடு போகாமல் இருக்க தற்காலிகமாக முடக்குகிறோம். அதற்கு உங்கள் ஐடி, பாஸ்வேர்டு சொல்லுங்கள்’ என்பார் மோசடி பேர்வழி. வங்கி பிரதிநிதி என்று நம்பி ஒப்பிப்பார் வாடிக்கையாளர். அடுத்த சில நிமிடங்களில் பறிபோகும்.
இப்படி வங்கி பிரதிநிதி போல பேசும் ஆண் அல்லது பெண் மோசடி பேர்வழி, நுனி நாக்கு ஆங்கிலத்திலும் அவரவர் மொழியிலும் சந்தேகம் வராதபடி பேசுவார். கிரடிட் கார்டு வாடிக்கையாளர்தான் அவர்களது குறி. வங்கி வாடிக்கையாளரில் பெரும்பாலோர் வங்கியின் லேண்ட்லைன் எண், மேலாளர், குறைதீர்ப்பு நடுவர் எண்களை தெரிந்து வைத்திருக்காதது மோசடி கும்பலுக்கு சாதகமாகிறது. இதுபற்றி ஏராளமான புகார்கள் வருவதாக வங்கி, போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

அம்மாவுக்கு வயசு 2 லட்சம்

 மனித குலத்தின் முதல் தாயாக கருதப்படும் பெண் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஒட்டுமொத்த மனிதகுலமும் ஒரு பெண்ணிடம் இருந்தே தோன்றியிருக்கிறது என்று கூறப்படுகிறது. இதற்கான ஆதாரங்கள் பற்றியும் இந்த முதல் பெண் எப்போது வாழ்ந்தாள் என்பது தொடர்பாகவும் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இதுதொடர்பாக சமீபத்தில் ஆய்வு நடத்தியிருப்பது அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ள ரைஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். பெருகிவரும் மக்கள்தொகை, வழக்கொழிந்த மக்கள் இனம் உள்பட பல அம்சங்களை வைத்து கணித ரீதியாக இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதுபற்றி ஆராய்ச்சியாளர் மாரக் கிம்மல் கூறியதாவது:
மனித உடலில் 100 லட்சம் கோடிக்கும் அதிகமான செல்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றிலும் மைட்டோகாண்ட்ரியா என்ற பொருள் உள்ளது. செல்லுக்கு தேவையான சக்தியை இவைதான் வழங்குகின்றன. இதில் இருக்கும் பகுதிப் பொருள் ஜீனோம். இந்த ஜீனோமின் குணங்கள் தாயிடம் இருந்தே வருகின்றன. எத்தனை பரம்பரைகள் ஆனாலும், இந்த ஜீனோம் மற்றும் மைட்டோகாண்ட்ரியா ஆகியவை தாயுடன் தொடர்புடையதாகவே இருக்கும். இதன் அடிப்படையில் வித்தியாசமான மரபணு பண்புகள் கொண்ட 10 மனித மாதிரிகளை உருவாக்கினோம். அதில் இருந்து அதற்கு முந்தைய வம்சம், அதற்கும் முந்தைய வம்சம் என்று 10 மாதிரிகளைக் கொண்டு தனித்தனியே கணக்கிடப்பட்டது. இதன்மூலம், முதன்முதல் ஜீனோம் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது தெரியவந்துள்ளது. மனித குலத்தின் முதல் தாயாக கருதப்படும் பெண் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்கலாம்.

கண்காணிப்பை மீறி போதை ஆசாமி விமான நிலையத்தில் ....

 பாதுகாப்பு படையினரின் கண்காணிப்பை மீறி போதை ஆசாமி ஒருவர் சென்னை விமான நிலையத்தில் புகுந்து அங்கு நின்றிருந்த ஒரு கண்காணிப்பை மீறி போதை ஆசாமிஏற முயன்றிருக்கிறார். ஏழு அடுக்கு பாதுகாப்பையும் மீறி அவர் எப்படி உள்ளே நுழைந்தார் என வழக்கம்போல விசாரணை நடக்கிறது.
பொதுவாக, விமான நிலையத்தில் வழக்கமான நாட்களில் நான்கு அடுக்கு பாதுகாப்பு இருக்கும். கார் பார்க்கிங், விமான நிலைய வராண்டா வரை உள்ளூர் போலீசார் இருப்பார்கள். அடுத்தகட்டமாக மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் (CSF) இருப்பார்கள். மூன்றாவது கட்டத்தில் விமான நிலைய பாதுகாப்பு படையினர் (PCAS) இருப்பார்கள். இதுபோக, விமான நிறுவனங்களின் பாதுகாப்பு வீரர்களும் இருப்பார்கள். சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நாட்களில் வெடிகுண்டு நிபுணர்கள், அதிரடிப் படையினர், சிறப்பு போலீசார் என கூடுதலாக மூன்று அடுக்கு பாதுகாப்பு இருக்கும்.
சுதந்திர தினம் என்பதால் அன்றும் ஏழு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதையும் மீறி எப்படி ஒருவர் விமானம் வரை சென்றார் என்பது பாதுகாப்பு குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது. என்ன செய்கிறோம் என தெரியாமல் போதையில் ஒருவர் இவ்வளவு தூரம் செல்ல முடிந்தால், திட்டமிட்டு செயல்படுத்தும் தீவிரவாதிகள் என்னவெல்லாம் செய்வார்கள்?
இப்படி நடப்பது முதல் முறையல்ல. ஓடுபாதையில் நாய் ஓடுவது, மர்ம நபர்கள் விமானம் வரை செல்வது என பல முறை நடந்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் அத்துமீறும் மர்ம நபர்கள் கைது செய்யப்பட்டு, விசாரணை நடந்து, நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் மீண்டும் மீண்டும் நடக்கிறது. ஒவ்வொரு முறையும் விமான நிலையத்துக்குள் அத்துமீறி நுழைபவர்கள் பிடிபடும்போது அவர்களை போதை ஆசாமி என்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் கூறி பிரச்னையை அமுக்கிவிடுகின்றனர்.
ஸ்டேட் போலீஸ், சென்ட்ரல் போலீஸ், சாதாரண உடையில் உளவு போலீஸ், திரும்பும் இடமெல்லாம் கண்காணிப்பு கேமரா என இத்தனை இருந்தும் அத்துமீறல்கள் நடப்பது பாதுகாப்பு குறித்த கவலையை ஏற்படுத்துகிறது.
விமான நிலையத்தில் புல் வெட்டுபவர், கட்டுமான தொழிலாளர், ஒப்பந்த ஊழியர்கள் ஆகியோருடன் பாதுகாப்பு போலீசார் பழகுவது, அந்த பரிச்சயம் காரணமாக ஐ.டி. கார்டைக்கூட சோதனை செய்யாமல் உள்ளே அனுமதிப்பது போன்றவை தீவிரவாதிகள் விமான நிலையத்தின் உள்ளே நுழைய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துவிடும். அதற்குள் விழித்துக் கொள்வது எல்லோருக்கும் நல்லது.
Thursday, August 19, 2010 | By: INDIA 2121

ஓரு தளிரின் தவிப்பு








உயிரை குடிப்பதில் முதலிடம்

புற்றுநோயால் உலகம் முழுவதும் ஆண்டுக்கு ரூ.42 லட்சம் கோடி விரயமாவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் பணக்கார நோயாக உருவெடுத்துள்ளது. அத்துடன் மனித உயிரைக் கொல்வதில் இந்த ஆண்டில் புற்றுநோய்க்கு முதலிடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க புற்றுநோய் சங்கம், புற்றுநோய் குறித்த ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:
வயது மூப்பு, விபத்து, இயற்கைச் சீற்றம் என மனித உயிரிழப்புக்கு பல்வேறு காரணம் இருந்தாலும், கொடிய நோய் காரணமாக உயிரிழப்பவர்கள் முன்னிலை வகிக்கின்றனர். அதிலும், எய்ட்ஸ், இதய நோய், புற்று நோய் ஆகிய தீராத வியாதிகள் மனிதர்களை பலி வாங்குகிறது.
அண்மைக் காலமாக புற்று நோயால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு மற்ற எல்லா நோய்களையும் விட புற்று நோயால் உயிரிழப்பவர்கள் முதலிடம் பிடிக்க வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு (WHO) கூறி உள்ளது. இந்த நோய்க்காக உலகம் முழுவதும் ஆண்டுக்கு ரூ.42 லட்சம் கோடி செலவிடப்படுகிறது. இதன்மூலம் உலகின் காஸ்ட்லி நோயாக உருவெடுத்துள்ளது.
இந்த வரிசையில் இதய நோய்க்கும் இரண்டாம் இடம் கிடைக்கும். இதற்காக ஆண்டுக்கு ரூ.35 லட்சம் கோடி பணம் விரயமாகிறது. புற்று நோய்க்கான செலவைவிட இது 20 சதவீதம் குறைவு.
‘‘குறைவான மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் புற்று நோய்க்கான செலவு வருங்காலங்களில் மேலும் அதிகரிக்கும்’’ என அமெரிக்க புற்றுநோய் சங்கத்தின் தலைமை செயல் அதிகாரி ஜான் செப்ரின் தெரிவித்தார்.
ஹார்வர்டு மெடிகல் ஸ்கூல் மற்றும் ஹார்வர்டு ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் தனித்தனியாக மேற்கொண்ட ஆய்வு மேற்கொண்டனர். ஒரு காலத்தில் புற்றுநோயால் வளர்ந்த நாடுகளில் உள்ள மக்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்ததாகவும், இப்போது ஏழை நாடுகளிலும் புற்று நோய் பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் இந்த ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளன.
புற்று நோயால் உயிரிழக்கும் 3ல் ஒருவர் ஏழை நாடுகளைச் சேர்ந்தவராக உள்ளார். எனவே, இதிலிருந்து தற்காத்துக் கொள்ள உலக நாடுகள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

‘பொன்னி’ அரிசி இந்தியாவுக்கு சொந்தம்

 மலேசிய நிறுவனத்துக்கு எதிரான வழக்கில், ‘பொன்னி அரிசி’ டிரேடுமார்க் இந்தியாவுக்கே சொந்தம் என மலேசிய உயர்நீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
மலேசியாவின் சியாரிகட் பைஸா நிறுவனம் கடந்த 1990களின் பிற்பாதியில் இந்தியாவிலிருந்து பொன்னி அரிசியை இறக்குமதி செய்து ‘தாஜ் மகால்’ பிராண்டின் கீழ் விற்பனை செய்து வந்தது. 2000 ஆண்டில் மலேசிய டிரேடுமார்க் சட்டத்தின்படி, ‘பொன்னி’ என்ற பெயரில் அரிசியை விற்பதற்கான டிரேடுமார்க் உரிமை வழங்குமாறு கோரி இருந்தது.
இதன்படி, மலேசிய நிறுவனத்துக்கு கடந்த 2006ம் ஆண்டு டிரேடுமார்க் வழங்கப்பட்டது. மலேசிய நிறுவனத்தின் இந்த செயலுக்கு இந்திய விவசாயிகள் மற்றும் அரிசி ஏற்றுமதியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காரணம், ‘பொன்னி’ என்ற பெயர் இந்தியாவுக்கு சொந்தமானது.
குறிப்பாக, தமிழக வேளாண்மை பல்கலைக்கழகம் கடந்த 1986ம் ஆண்டு பொன்னி ரகத்தை கண்டுபிடித்தது. பாசுமதி அரிசிக்கு அடுத்தபடியாக இதற்கு அதிக கிராக்கி ஏற்பட்டது. பின்னர் லட்சக் கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டு வெளிநாடுகளுக்கெல்லாம் ஏற்றுமதி செய்யப்பட்டது.
சியாரிகட் நிறுவனத்துக்கு எதிராக, மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம் (ஏபிஇடிஏ) மலேசிய உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
அதில், பொன்னி என்ற பெயர் இந்தியாவுக்கே சொந்தம் அதை மலேசிய நிறுவனம் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தது. இந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த வழக்கில் மலேசிய உயர்நீதிமன்றம் இந்தியாவுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கி உள்ளது.
இதுகுறித்து, ஏபிஇடிஏ தலைவர் அசித் திரிபாதி கூறுகையில், ‘‘பொன்னி அரிசி டிரேடு மார்க் இந்தியாவுக்கே முற்றிலும் சொந்தம், இந்த பெயரை சியாரிகா நிறுவனம் பயன்படுத்தக் கூடாது என மலேசிய உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது’’ என தெரிவித்தார்.
மேலும், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்த அரிசியை பொன்னி என்ற பெயரில் விற்கவும் சியாரிகா நிறுவனத்துக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கான தடையை மத்திய அரசு விலக்கிக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2008 ஏப்ரலில் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தடைவிதிப்பதற்கு முன்பாக, ஆண்டுதோறும் 1.5 லட்சம் டன் பொன்னி அரிசியை இந்தியா ஏற்றுமதி செய்து வந்தது. இதில் மலேசியாவுக்கு மட்டும் 15 ஆயிரம் டன் ஏற்றுமதி ஆனது.
Wednesday, August 18, 2010 | By: INDIA 2121

பொருளாதார வளர்ச்சியில் இந்தியா முதலிடம்

 
 பொருளாதார வளர்ச்சியில் அடுத்த 5 ஆண்டுகளில் உலகிலேயே இந்தியா முதலிடம் பிடிக்கும் என மார்கன் ஸ்டான்லி ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
இதுகுறித்து நிதி மற்றும் பொருளாதார ஆய்வு நிறுவனமான மார்கன் ஸ்டான்லியின் ஆசியா, இந்தியாவுக்கான நிர்வாக இயக்குனரும், பொருளாதார நிபுணருமான சேத்தன் அயார்  வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
உலகமயமாதல், கட்டமைப்பு சீர்திருத்தங்கள் ஆகியவற்றில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. இதன் விளைவாக, அடுத்து வரும் ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி வேகமெடுக்கும். 2013 முதல் 2015ம் ஆண்டுக்குள் இந்தியாவின் வளர்ச்சி 9 முதல் 9.5 சதவீதத்தை தொடும்.
இதன்மூலம், சீனாவை அது முதலிடத்தில் இருந்து பின்னுக்கு தள்ளி விடும். 2012ல் சீனா பொருளாதார வளர்ச்சி இப்போதுள்ள 9 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக குறையும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிகரித்துள்ள நடுத்தர வயது பிரிவினர், இளைஞர்களால் மனித சக்தி உயர்ந்து வருகிறது. வேலைக்கான வயதினர் அதிகரிக்கும் வகையில் இந்தியாவில் இறப்பு விகிதம் குறைவதுடன் பிறப்பு விகிதமும் குறைந்து வருகிறது. இதனால், வேலைக்கு போகாத வயதினர் (குழந்தைகள், முதியவர்கள்) எண்ணிக்கை குறைகிறது.
அடுத்தவரை சார்ந்து வாழும் பிரிவினர் எண்ணிக்கை சரிவால், நாட்டின் உற்பத்தி, வருமானம் அதிகரித்து பொருளாதார முன்னேற்றம் விரைவாகும். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) உயரும். இதுதான் அடுத்த சில ஆண்டுகளில் உலகிலேயே இந்தியா முதலிடம் பெற இருப்பதற்கு காரணம்.

ஒரு எம்பியின் சம்பளம் 1 லட்சம்

 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளம் உயர்த்துவதை யாரும் எதிர்க்க மாட்டார்கள் என்று நினைத்தோம். ஆனால் எதிர்க்கிறார்கள். எதிர்ப்பவர்கள் அரசியல்வாதிகள் என்பது ஆச்சரியம்.
ஒரு எம்.பி.யின் சம்பளம் ரூ.16,000. ஒரு பியூனின் சம்பளத்தைவிட இது குறைவு என்று லாலு பிரசாத் குமுறுகிறார். தப்பான வழியில் நிறைய சம்பாதிக்கும் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள் என்பதால் மற்றவர்களுக்கும் நல்ல சம்பளம் மறுப்பது நியாயமல்ல என்கிறார். இந்த கோரிக்கை புதிதல்ல. அதை ஆராய்ந்த குழு, சம்பளத்தை ஐந்து மடங்கு உயர்த்த சிபாரிசு செய்தது. எண்பதாயிரம். அது அமைச்சரவை செயலாளர் வாங்கும் சம்பளம். அதைவிட ஒரு ரூபாய் மேலே போட்டுக் கொடுங்கள் என்று எம்.பி.க்கள் கேட்டு, அரசும் ஒப்புக் கொண்டிருக்கிறது.
மாவட்டத்தை ஆட்சி செய்யும் கலெக்டர்களே பிரமாண்டமான பங்களாவில் வசித்தாலும் குடும்ப செலவுகளை சமாளிக்க திணறிக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் எந்த அரசியல்வாதியும் குடும்ப செலவுக்கு திண்டாடுவதாக சரித்திரமும் இல்லை,பூகோளமும் இல்லை . ஆனால்  விலைவாசி யாரையும் விட்டு வைக்கவில்லை. கம்யூனிஸ்ட் கட்சிகளின் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் தனி. சம்பளத்தை அப்படியே கட்சிக்கு கொடுத்து விட வேண்டும். மாத செலவுகளுக்கு கட்சி ஒரு சிறு தொகை கொடுக்கும். அதை வைத்து சமாளித்துக் கொள்ள வேண்டும். மக்களுக்கு இது தெரியும். அதனால் அதிகமாக தொந்தரவு கொடுப்பதில்லை. மற்ற கட்சியினர் அவ்வளவு அதிர்ஷ்டம் செய்யவில்லை. தினம் நூறு பேர் வருவார்கள். அதில் பலருக்கு சாப்பாடு போட்டு, ஊர் திரும்ப பஸ் கட்டணமும் கொடுக்க வேண்டியிருக்கும். கட்சிக்காரர், தெரிந்தவர், பத்திரிகையாளர் என்று தினமும் ஒரு வீட்டில் ஒரு நல்லது கெட்டது நடக்கும். மொய் எழுத வேண்டும்.
மக்கள் பிரதிநிதி என்றால் இப்படி பல வகையிலும் செலவுகள் இருக்கும். அதற்கு பணம் இல்லையென்றால் என்ன ஆகும்? மக்கள் சந்திப்பை தவிர்க்கலாம்; அல்லது தவறான வழிகளை நாடலாம். இது தெரிந்து சில மாநிலங்கள் எம்.எல்.ஏ சம்பளத்தை ஒரு லட்சமாக உயர்த்தியுள்ளன.
மாதம் ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிய முதல்வர் வாழ்ந்த நாடு.எந்த அரசியல்வாதியும்
அரசின் சம்பளத்தை மட்டுமே நம்பி இங்கு வாழவில்லை.பதவி வருமுன் அவர்கள் வாழ்க்கை எப்படி இருந்தாலும்,பதவிக்கு வந்த பின்பு பல கார்கள்,பல பங்களாக்கள்
பலதரப்பட்ட  தொழில்கள்,கான்ராட் என எல்லாவித செல்வ செலிப்போடுதான் வாழ்கிறார்கள்.ஏன் வட்டம்,மாவட்டம் கூட அன்றாட செலவுக்கு திண்டாடவில்லை.
சம்பளத்தை அதிக படுத்த சொல்லும் லல்லு பற்றி நான் சொல்ல வேண்டாம்.உலகுக்கே
தெரியும்.இந்தியாவில் இருக்கும் அரசியவாதிகளில் யார் செலவுக்கு திண்டாடுகிறார்கள்.
அரசு அது பற்றி ஒரு சர்வே எடுக்கட்டும்,எந்த அரசியவாதி கஷ்டபடுகிரானோ அவர்களுக்கு மட்டும் சம்பளம் ஏற்றலாம். மற்றபடி தேவையில்லாமல் மக்களின் வரிபணத்தை வீணடிக்க வேண்டாம்.அந்த பணத்தில் மக்களுக்கு நல்ல சாலை வசதி,குடிநீர்,மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரலாமே? இந்தியாவில்
பீகார்,ஒரிசா போன்ற மாநிலங்களில் இன்னும் அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லாத கிராமங்கள் ஏராளம்.இது போன்ற குறைபாடுகளால் தான் இந்த மாநிலங்களில் நக்சல் தீவிரவாதிகளின் கை ஓங்கி உள்ளது.அரசு திட்டங்கள் தீட்டும் போது தொலை நோக்கு
பார்வையோடு மக்களுக்கு பயனளிக்கும் நல்ல திட்டங்களுக்கு இது போன்ற நிதிகளை
பயன்படுத்தலாமே.
Tuesday, August 17, 2010 | By: INDIA 2121

பாஸ் வேலைக்கு ஆண்களே தகுதி

 ஒரு பெண்ணின் கீழ் வேலை செய்வதை பெண்களே விரும்பவில்லை என்கிறதாம் ஒரு சர்வே. பிரிட்டனில் நடத்தியது. மூவாயிரம் ஊழியர்கள், அதிகாரிகளிடம் கேள்விகள் கேட்டு தொகுத்திருக்கின்றனர். பாஸ் பொறுப்புக்கு ஆண்களே சரியானவர்கள் என்று 75 சதவீத ஆண்களும் 63 சதவீத பெண்களும் கூறியுள்ளனர்.
தலைமை பதவியில் இருப்பவரை பாஸ் என்று குறிப்பிடுவது சகஜம் என்றாலும் அவர் பெண்ணாக இருந்தால் பாஸ் என அழைப்பவர்கள் அரிது. பெண்கள் வேலைக்கு போக தொடங்கிய காலத்தில் இருந்தே இப்படியான ஆய்வுகள் நடக்கின்றன. முடிவுகள் வேறு மாதிரி இருந்ததில்லை. காரணங்களும் கூட.
சொந்த பிரச்னைகளை வேலையுடன் சம்பந்தப்படுத்தி குழப்புவதும், முதுகில் குத்துவதும் பெண்கள் சொல்லும் குறைகள். குத்திக் காட்டுவது, சந்தேகப்படுவது, மன பிராந்தி, மூட் மாற்றம் என்பவை ஆண்கள் தரும் பட்டியல். ஆண் பாஸ் என்றால் நாற்காலியை பற்றி அனாவசியமாக பயப்படுவதில்லை; எது சொன்னாலும் காதுகொடுத்து கேட்பார்; புகார்கள் மீது நியாயமாக முடிவு எடுப்பார் என இரு தரப்பும் புகழ்மாலை சூட்டுகின்றன.
ஆணுக்கு அடுத்த இடம்தான் பெண்ணுக்கு என்பது எல்லா நாகரிகத்திலும் மனித மரபணுக்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்திரா காந்திகளும் நூயிகளும் விதிவிலக்குகளாக பார்க்கப்படுகின்றனர். உதைக்க உரிமையுள்ளவன் கணவன் என்று மனைவி தீர்ப்பெழுதும் நிலை மாறவில்லை. பெண்கள் வேலைக்கு செல்ல தொடங்கிய ஒரு நூற்றாண்டுக்குள் தலைகீழ் மாற்றம் சாத்தியமில்லை. அத்தகைய பெண்கள் சிறுபான்மை. அவர்களிலும் இடறிவிழாமல் ஏணியேறி மேலிடத்தை எட்டுவோர் இன்னும் குறைவு. இந்த பயணத்தில் எதிர்கொண்ட அநீதிகள் ஆழ்மனதில் ஏற்படுத்தும் காயங்கள் வாழ்நாளில் ஆறக்கூடியவை அல்ல. சுலபத்தில் யாரையும் நம்ப மறுப்பது அந்த வலியின் வெளிப்பாடு. அதோடு சிறுபான்மை பார்வையும் சேரும்போது வெளிமதிப்பீடுகள் இப்படித்தான் அமையும்.
என்றாலும், 37 சதவீத பெண்களும் 25 சதவீத ஆண்களும் பெண் பாஸ் ஓகே என்று சொல்வதை உதாசீனப்படுத்த முடியுமா, என்ன? அடுத்த நூற்றாண்டில் இந்த எண்ணிக்கை என்னவாக இருக்கும் என்பதை இன்று யாராலும் கணிக்க முடியாது.
Friday, August 13, 2010 | By: INDIA 2121

மொபைல் தண்ணியில விழுந்துடுச்சா? உடனே எடுத்து குக்கர்ல போடுங்க...

 
தண்ணீரில் நன்கு ஊறிய செல்போனை எடுத்துக் கொள்ளவும். அதை ‘டிரையர் பாக்ஸில்’ போட்டு மூடவும். அரை மணி நேரம் கழித்து உங்கள் சூப்பர் செல்போன் ரெடியாகிவிடும். தேவைக்கேற்ப பவுச், டேக் சேர்த்து சட்டை பாக்கெட்டிலோ, பெல்ட்டிலோ செருகிக் கொள்ளலாம். இது காமெடி ‘சமையல்’ குறிப்பு அல்ல. நிஜம்தான்.
ரசம், தண்ணீர் தொட்டி, டாய்லெட்டில் செல்போன் தவறிவிழுந்த அனுபவம் பலருக்கு இருக்கும். மழைநீரில் குளிக்காத செல்போன்களே பெரும்பாலும் இருக்காது. வெளிப்பகுதியை டவல் போட்டு துடைத்து, பல மணி நேரம் வெயிலில் காய வைத்து சர்வீஸ் சென்டருக்கு எடுத்துச் சென்றாலும், முதல் ஸ்குரூவை கழற்றியதுமே ‘நோ வாரன்டி’ என்று கறாராக சொல்லிவிடுவார் சர்வீஸ் சென்டர் ஊழியர். செல்போனின் உள்பகுதிகளில் புகுந்த தண்ணீர் அவ்வளவு சீக்கிரம் காய்வதில்லை.
இந்த பிரச்னைக்கு தீர்வு கண்டிருக்கிறது ஜப்பானை சேர்ந்த ஜே.எம்.சி. ரிஸ்க் சொல்யூஷன்ஸ் நிறுவனம். தண்ணீரில் நனைந்த செல்போனை காயவைப்பதற்காக ‘டிரையர் பாக்ஸ்’ என்ற கருவியை கண்டுபிடித்துள்ளது. சிறிய ஜெராக்ஸ் மெஷின் சைஸில் இருக்கிறது கருவி. நனைந்த செல்போனை இதனுள் போட வேண்டும். அரை மணி நேரத்தில் செல்போனின் உள்பாகங்கள் உள்பட அனைத்து பகுதிகளும் முழுவதும் காய்ந்துவிடுகிறது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோ உள்பட பல நகரங்களிலும் எலக்ட்ரானிக்ஸ் கடைகள், செல்போன் சர்வீஸ் சென்டர் உள்பட பல இடங்களிலும் விரைவில் இக்கருவிகள் வைக்கப்பட உள்ளன. செல்போனை உலர்த்தித் தர ரூ.585 கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
இக்கருவி பற்றி ஜே.எம்.சி. அதிகாரிகள் கூறுகையில், “செல்போன் ஸ்கிரீன், உள்ளே இருக்கும் சிப்களை மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும். சற்று வெப்பம் அதிகரித்தாலும் செல்போன் நிரந்தரமாக பாதிக்கப்பட்டுவிடும். எனவே, அதற்கேற்ற வெப்பம் தரும் வகையில் டிரையர் பாக்ஸ் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது” என்றனர்.
டோக்கியோவுக்கு வந்து, சென்னைக்கு வந்து, நம்ம ஏரியாவுக்கு டிரையர் பாக்ஸ் வருவதற்குள் தண்ணீரில் செல்போன் விழுந்துவிட்டால் என்ன செய்வது? வெளிப்பகுதியை நன்கு துடைத்து, அரிசி வைத்திருக்கும் டப்பாவில் போடுங்கள். ஈரத்தன்மையை அரிசி எடுத்துவிடும் என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள்.

குழந்தை திருமணம்

 ஒவ்வொன்றுக்கும் ஒரு வயது இருக்கிறது. சிறு வயது விளையாட்டுக்கானது. வாலிப வயது காதல் வயது. அப்புறம்தான் திருமண வயது. இது உலக வழக்கம். ஆனால் விளையாடும் வயதிலேயே திருமணம் முடிக்கும் கொடுமை இந்தியாவில் பல மாநிலங்களில் இன்னமும் தொடர்கிறது. என்ன நடக்கிறது, இதற்கு அப்புறம் என்ன செய்ய வேண்டும் என எதுவுமே தெரியாத சிறுவர்களை, சிறுமிகளை திருமண பந்தத்தில் தள்ளும் வழக்கம் வட இந்தியாவில்தான் அதிகம். தமிழகத்திலும் அதுபோன்ற குழந்தைத் திருமணங்கள் கடைசி நேரத்தில் தடுக்கப்பட்டு விடுகிறது.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள குட்டிக் கிராமம் கரடிமடை. இங்கு 8ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு அடுத்த 3 மாதங்களில் நடப்பதாக இருந்துள்ளது. படிக்க வேண்டிய வயதில் திருமணமா? என மனம் வெறுத்த சிறுமி அது குறித்து வருவாய்த் துறையினர் நடத்திய மக்கள் குறைதீர்ப்பு முகாமில் புகார் கொடுத்துள்ளார். இரு குடும்பத்தினரையும் கூப்பிட்டு விசாரணை நடத்திய வருவாய்த் துறையினர் கட்டாய திருமணம் நடத்துவது குற்றம், மீறி நடத்தினால் அத்தனை பேரும் கைது செய்யப்படுவீர்கள் என எச்சரித்த பிறகு திருமணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கட்டாய திருமணம் செய்ய மாட்டோம் என உறுதி அளித்த குடும்பத்தினர், சிறுமியை மீண்டும் பள்ளிக்கு அனுப்பவும் சம்மதித்துள்ளனர்.
குழந்தைப் பருவத்தில் திருமணம் செய்யக் கூடாது என்பது எல்லோருக்குமே தெரியும். ஆனாலும் பெண் குழந்தைகளைப் பெற்றதில் இருந்து வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு இருப்பதாக நினைக்கும் பெற்றோர், எவ்வளவு சீக்கிரம் பெண்ணை கட்டிக் கொடுக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கடமையை முடித்துவிட நினைக்கின்றனர். நல்லது செய்வதாக நினைத்துக் கொண்டு, சிறுமியாக இருக்கும்போதே, திருமணம் என்ற கிணற்றில் தள்ளி விடுகின்றனர். ஆனால் இப்போது நிலைமை மாறி வருகிறது. பெற்றோர் எப்படியோ, அடுத்த தலைமுறை சுதாரிப்பாக உள்ளனர். உறவினர் மூலமோ அல்லது நேரடியாகவோ புகார் கூறி இதுபோன்ற கட்டாய திருமணத்தை நிறுத்தி விடுகின்றனர். காரணம் கல்வி அறிவு. ஒரு தலைமுறை படித்து விட்டாலே போதும். பால்ய விவாகம் என்றால் என்ன எனக் கேட்கும் வகையில் அடுத்த தலைமுறை வந்துவிடும். அதற்காகவாவது கல்வி அவசியம். 
 
கொசுறு செய்தி
‘திருமண வயது’ என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கும் வயதை எட்டாத சிறுவன், சிறுமியர் மனமொத்து திருமணம் செய்து கொண்டால் அது செல்லும் என டெல்லி ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
டெல்லியைச் சேர்ந்த ஜிதேந்தர் குமாரும்(18), பூனம் சர்மாவும்(16) வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டனர். இதை ஏற்றுக் கொள்ளாத பூனத்தின் பெற்றோர் ஜிதேந்தர் தங்களது மகளை கடத்தியதாக போலிசில் புகார் செய்தனர். பூனம் ஒரு மைனர் என்பதால் போலீசாரும் வழக்கு பதிவு செய்து ஜிதேந்தரை தேடிக் கண்டுபிடித்து கிரிமினல் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் நீதிபதிகள் பி.டி.அகமது மற்றும் வி.கே.ஜெயின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, “திருமண வயதை எட்டாத சிறுவன், சிறுமி மனமொத்து திருமணம் செய்து கொண்டால் அது செல்லும். இந்து திருமண சட்டத்தில் உள்ள பால்ய விவாக தடுப்பு ஷரத்தில் இத்தகைய திருமணம் செல்லாது என்று கூறப்படவில்லை. சிறுவனுக்கோ, சிறுமிக்கோ திருமணத்தில் விருப்பம் இல்லை என்றால் மட்டுமே திருமணம் செல்லாது என அறிவிக்க முடியும். சிறுவன் ஜிதேந்தர் தற்போது சிறுமி பூனத்தின் சட்டப்படியான பாதுகாவலன்” என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
திருமணம் செய்து கொள்ள ஆண்களுக்கு 21 வயதும், பெண்களுக்கு 18 வயதும் நிரம்பியிருக்க வேண்டும் என இந்து திருமணச் சட்டத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த சட்டத்தை மீறி திருமணம் செய்தால் அது செல்லாது என்று சட்டத்தில் எங்கும் சொல்லப்படவில்லை. இதன் அடிப்படையில் தற்போது நீதிபதி அளித்திருக்கும் தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இன்றிலிருந்து "பொக்கிஷம்" என்ற புதிய பகுதி ஆரம்பம்:
"பொக்கிஷம்"
இது சென்னை மெரினா கடற்கரை - அன்று
சென்னை மெரினா கடற்கரை - இன்று
 இது 13 கிலோ மீட்டர் நீளமுள்ள உலகின் இரண்டாவது மிகப் பெரிய கடற்கரை .
Thursday, August 12, 2010 | By: INDIA 2121

காஷ்மீரின் உண்மை கதை

காஷ்மீருக்கு சுயாட்சி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என பிரதமர் சொன்னதை கேட்டு பாரதிய ஜனதா கொதித்து எழுந்துள்ளது. எல்லா கட்சிகளும் ஒப்புக் கொண்டால் என்று அவர் கண்டிஷன் போட்டிருக்கிறார். அதை யாரும் கவனித்ததாக தெரியவில்லை. சுயாட்சி கொடுப்பது சுதந்திரம் கொடுப்பதற்கு முன்னோட்டம் என்ற ரீதியில் கண்டிக்கின்றனர்.
காஷ்மீர் ஒரு காலத்தில் இந்து மதம் தழைத்த பூமி. என்றாலும் அது பழங்கதை. 1350ல் தொடங்கிய முஸ்லிம் ஆட்சி ஐந்து நூற்றாண்டுகள் நீடித்ததன் தாக்கம் இன்றுவரை தெரிகிறது. 1820ல் மகாராஜா ரஞ்சித் சிங் கைக்கு காஷ்மீர் மாறியதோ, 1947ல் அதை சுதந்திர இந்தியாவுடன் மகாராஜா ஹரிசிங் இணைத்ததோ மத விகிதாசாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. தீவிரவாதிகள் மிரட்டலால் காஷ்மீரி பண்டிட்கள் வெளியேறி, பெரும்பான்மை சதவீதம்தான் தொண்ணூறை தாண்டியது. ஜம்முவும் லடாக்கும் அவர்கள் குறைவாக உள்ள பகுதிகள்.
இன்றைய தேதியில் காஷ்மீரின் 45 சதவீத நிலப்பரப்பு இந்தியாவிடம் உள்ளது. 33 சதவீதம் பாகிஸ்தான் பிடியில். மீதியை சீனா ஆக்கிரமித்துள்ளது. நம் வசமுள்ள காஷ்மீரையும் கைப்பற்றுவது, முடியவில்லை என்றால் அதை தனி நாடாக மாற்றுவது பாகிஸ்தானின் லட்சியம். இதற்காக 63 ஆண்டுகளாக போராடுகிறது. அவ்வப்போது போரிடுகிறது. சீனா, சவுதி உட்பட பல நாடுகள் உதவுகின்றன. அந்த கனவு நனவாக விடக்கூடாது என்பதற்காக இந்தியா கொடுக்கும் விலை கொஞ்சமல்ல.
ஏராளமான வீரர்களையும் அப்பாவிகளையும் பலி கொடுத்திருக்கிறோம். நாடெங்கும் நாசவேலைகளை சந்திக்கிறோம். எந்த மாநிலத்துக்கும் இல்லாத வகையில் நிதியை வாரி வழங்குகிறது மத்திய அரசு. காஷ்மீருக்கென தனி சட்டங்கள். தனி அரசியல் சாசனமே இருப்பது பலருக்கு தெரியாது. ஆனாலும் காஷ்மீர் மக்கள் நம்மை இந்தியர்கள் என அழைக்கிறார்களே தவிர தங்களை காஷ்மீரிகள் என்றுதான் அடையாளம் சொல்கின்றனர்.
பிரிவினை பேசிய மாநிலங்கள் எல்லாமும் காலப்போக்கில் தேசிய நீரோட்டத்தில் சங்கமித்து மூவர்ணக் கொடியை பெருமிதத்துடன் உயர்த்திப் பிடித்த பிறகும் மனம் மாறாத ஒரு மாநிலத்து மக்களை கட்டிக் கொண்டிருப்பதில் அர்த்தமென்ன இருக்கிறது?
Wednesday, August 11, 2010 | By: INDIA 2121

ஆசிரியரே கொலைகாரர் ஆனார்

 கொடைக்கானலில் பள்ளி ஆசிரியை பிரம்பால் அடித்ததில் மாணவி ஒருவர் மயங்கி விழுந்து இறந்திருக்கிறார். ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெற்றோரும்  உறவினர்களும் பள்ளியை முற்றுகையிட்டும் பஸ் மறியல் செய்தும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
மாதா, பிதா, குரு, அதன்பிறகே தெய்வம் என்பார்கள். பாடம் சொல்லித் தர வேண்டிய குருவே கொலையாளியாக மாறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எல்லோருடைய வாழ்க்கையிலும்  மிகவும் சந்தோஷமான காலகட்டம் என்பது மாணவ பருவம்தான். சாதி வித்தியாசம், ஏழை, பணக்காரன் வித்தியாசம் என எந்தக் கவலையும் இல்லாமல் சிறகடிக்கும் பருவம் . அதிலும் பிளஸ் 2 மாணவர்கள் டீன் ஏஜ் தொட்டவர்கள். பாட்டு, டான்ஸ், கேலி, கிண்டல் என உலகை மறந்து இருக்கும் பருவம். வகுப்பறையில் பாட்டுப் பாடி விளையாடியுள்ளனர் மாணவிகள். அப்போது அங்கு வந்த ஆசிரியைதான் கோபத்தில் கண் மண் தெரியாமல் மாணவியைப் போட்டு வெளுத்திருக்கிறார். அடி தாங்காமல் மயங்கி விழுந்துள்ளார் மாணவி. வீடு வந்த மாணவி ஆசிரியை பிரம்பால் அடித்த காயத்தை பெற்றோரிடம் காட்டியுள்ளார். சிறிது நேரத்தில் மீண்டும் மயங்கி விழுந்து இறந்து விட்டார்.
இப்போதெல்லாம் பெற்றோரே பிள்ளைகளை அடிப்பதில்லை. செல்லமாக வளர்க்கிறார்கள். அடித்தால் பயமில்லாமல் போய்விடும் என்பதால் அன்பு காட்டி திருத்துகிறார்கள். பிள்ளைகளும் பொறுப்பு உணர்ந்து படிக்கிறார்கள். அதனால்தான் டிவி, சினிமா, இன்டர்நெட் என எத்தனையோ விஷயங்கள் குறுக்கே வந்தாலும் அதையும் தாண்டி சாதனை படைக்கிறார்கள். பிளஸ் 2 வந்துவிட்டால், காலையில் கோச்சிங், ரெகுலர் கிளாஸ், ஈவினிங் கோச்சிங், நைட் ஸ்டடி, எக்ஸ்பர்ட் கிளாஸ், டியூஷன் என கேப் இல்லாமல் படிப்பு படிப்புதான். இடையில் கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் சிரித்து பேசி மகிழ்வது தவிர வேறு எந்த ரிலாக்ஸும் கிடையாது. கேலியும் கிண்டலும்தான் ஒரே பொழுதுபோக்கு. அதைக்கூட அனுமதிக்காமல் அடித்து நொறுக்குவது மனிதத் தன்மையே கிடையாது. படிப்பு முக்கியம்தான். அதற்காக ஞானிபோல் அத்தனையையும் விட்டுவிட வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்ப்பது எநத விதத்திலும் நியாயம் கிடையாது. படிப்பு இந்த ஆண்டு இல்லாவிட்டால் அடுத்த ஆண்டு. உயிர்...? தண்டனை தருவதற்கு முன்னால் ஆசிரியர்கள் இதை உணர வேண்டும்.

இந்தியாவின் சாதனை பெண்

 தேஜஸ்வினி என்ற தங்க மங்கை புதிதாக கிடைத்திருக்கிறார் நமக்கு. கிரிக்கெட், டென்னிஸ் அளவுக்கு ஏனைய டீம் விளையாட்டு எதுவும் பிரபலம் ஆகாத நாட்டில் தனிநபர் விளையாட்டு பற்றி பேசவே இடமில்லை. அத்தகைய சூழலில் துப்பாக்கி சுடும் போட்டியில் உலக சாம்பியன் பட்டத்தை ஒரு பெண் வென்று வந்திருப்பது அபாரமான சாதனை.
மராட்டிய பெண் தேஜு. அப்பா சாவந்த் கடற்படையில் என்ஜினியராக இருந்தவர். அம்மா சுனிதாவுக்கு விளையாட்டில் ஈடுபாடு அதிகம். குறி பார்த்து சுடுவதில் தேஜு 12 வயதிலேயே ஆர்வம் காட்டினார். அதில் அவளுக்கு பிரமாதமான எதிர்காலம் இருக்கிறது என்று ஒரு பயிற்சியாளர் சொன்னதை பெற்றோர் பிடித்துக் கொண்டனர். ஆனால், துப்பாக்கியும் மற்ற சாதனங்களும் வாங்கி பயிற்சி பெற நிறைய பணம் தேவை. தெரிந்தவர்களிடம் மகளுக்காக உதவி கேட்டார் தந்தை. பலர் கேலி செய்தனர்; சிலர் செலவில்லாத விளையாட்டை சிபாரிசு செய்தனர். உலக சாம்பியனாக வரும் அளவுக்கு தேஜுவுக்கு திறமை இருப்பதாக சாவந்த் சொன்னதை ஒரு அப்பாவின் பெருமைப் பேச்சு என்றுதான் எடுத்துக் கொண்டனர்.
பெற்றோரின் கஷ்டத்தை சகிக்க முடியாமல், ‘இதெல்லாம் சரிப்படாது, நான் ஏதாவது பட்டம் வாங்கி வேலைக்கு போகிறேன்’ என்று மகள் விரக்தியுடன் சொன்னதை தாய் ஏற்கவில்லை. ‘தொடர்ந்து பயிற்சி செய், மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’ என்று தெம்பூட்டினார். சிறுகச் சிறுக கடன் வாங்கி, வீட்டு செலவை குறைத்து தேஜுவுக்கு வேண்டியதை செய்துகொடுத்தனர். அந்தப் பெண் ஜெர்மனி சென்று கழுத்தில் தங்கப் பதக்கமும் கையில் உலக சாம்பியன் பட்டமும் ஏந்தி திரும்பிவந்த போது சுனிதாவின் தாயுள்ளம் பெருமையில் தளும்பியது. ‘இந்த காட்சியை பார்க்க அவளது அப்பா இருந்திருக்க வேண்டும்.. 18 ஆண்டுகளாக அவர் கண்ட கனவு..’ என்று மகளை அணைத்துக் கொண்டு கண்கலங்கினார் சுனிதா. சாவந்த் உடல் நலம் பாதித்து பிப்ரவரியில் காலமானார்.
‘பணமும் பின்னணியும் பெரிதல்ல. உழைப்பும் முயற்சியும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்று என் மகள் நிரூபித்து விட்டாள்’ என்று சுனிதா சொன்னது பெற்றோர்கள் மனதில் எழுத வேண்டிய செய்தி.
Tuesday, August 10, 2010 | By: INDIA 2121

இந்தியா - வங்கதேசம் இணைப்பு

 அசாம், அருணாச்சல், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, திரிபுரா ஆகியவற்றை வடகிழக்கு மாநிலங்கள் என்கிறோம். நாடாளுமன்றத்தில் 25 சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அங்கிருந்து டெல்லிக்கோ சென்னைக்கோ வருபவர்கள், இந்தியாவுக்கு சென்று வருகிறோம் என்று வீட்டில் சொல்லிவிட்டு கிளம்புகிறார்கள்.
இது காஷ்மீரில் சொல்வதுபோல் தனிநாடு எண்ணத்தால் அல்ல. மெயின் இந்தியாவுக்கும் வடகிழக்கு மாநிலங்களுக்கும் இடையே வங்காள தேசம் இருப்பதால் தோன்றும் தூர உணர்வு. பூட்டானுக்கும் வங்கதேசத்துக்கும் மத்தியில் ஓரிடத்தில் குறுகலான மேற்குவங்க நிலப்பரப்பு இருக்கிறது. அந்த வழியாகத்தான் சுற்றிவளைத்து செல்ல வேண்டியிருக்கிறது. வங்கதேசம் உருவாக இந்தியா காரணமாக இருந்தாலும் அந்த நாட்டுடன் நல்லுறவு இல்லை. எனவே அதன் வழியே வடகிழக்கை அடைய இயலவில்லை. அந்த நிலை விரைவில் மாறும் என்ற செய்தி வந்திருக்கிறது.
வங்கதேசம் வழியாக வடகிழக்கு மாநிலங்களுக்கு இந்திய மக்களும் வாகனங்களும் சரக்குகளும் செல்ல அந்நாட்டு அரசு அனுமதித்துள்ளது. அந்த இணைப்புக்கான நவீன சாலை, ரயில்பாதை வசதிகள் இப்போது இல்லை. அவற்றை ஏற்படுத்த இந்தியா 100 கோடி டாலர் கடன் வழங்கியுள்ளது. நேபாளம், பூட்டான் நாடுகளும் இந்த பாதைகளை பயன்படுத்தலாம். தெற்கு ஆசியாவின் நான்கு நாடுகள் இவ்வாறான ஒரு இணைப்பை உருவாக்க முன்வந்திருப்பது மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியின் ஆரம்பமாக அமையும் என்று நிபுணர்கள் கணிக்கின்றனர்.
வங்கதேசம் ஏழை நாடு. ஆனால், பாகிஸ்தானை போல அங்கும் இந்தியாவுக்கு எதிரான பிரசாரம் மூலமே அரசியல் நடத்தும் கட்சிகள் இருப்பதால் இந்திய பொருளாதார வளர்ச்சியின் பலன்களை முகர்ந்து பார்க்கக்கூட முடியாத நிலையில் தவித்தது. முஜிபுர் ரகுமானின் மகள் ஷேக் ஹசீனா பிரதமர் ஆன பிறகு அந்த பரிதாப நிலைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடிவு எடுத்தார். ஜனவரியில் டெல்லி வந்தபோது அதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு சென்றார். அதன் விளைவுகளில் ஒன்று இந்த இணைப்பு.
சம்பந்தப்பட்ட அனைத்து மக்களுக்கும் இதனால் பெரும் பலன்கள் கிடைக்கும் என்பதால் தீவிரவாதிகள் இந்த திட்டம் நிறைவேறாமல் தடுக்க எதையும் செய்வார்கள். இருநாட்டு அரசுகளும் ஆரம்பத்திலேயே அதற்கு தயாராவது நல்லது.
Monday, August 9, 2010 | By: INDIA 2121

காமன்வெல்த் விளையாட்டு

 
காமன்வெல்த் விளையாட்டு போட்டி அமைப்புக்குழு தலைவர் சுரேஷ் கல்மாடியை பாராட்ட வேண்டும். மீடியா மொத்தமும் அடித்து துவைத்து உலர்த்தினாலும் அசராமல் சிரிக்கிறார். ‘நான் ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை’ என்கிறார்.
‘பிரதமரும் சோனியா காந்தியும் சொன்னால் ராஜினாமா செய்வேன் ஆனால் போட்டிகள் முடிந்த பிறகு’ என்று அவர் சொல்வதை கேட்டு எதிரிகளும் புன்னகைப்பார்கள். கல்மாடிக்கு எதிரிகளுக்கு  பஞ்சமில்லை. செல்வாக்கு மிக்கவர்கள். அதனால்தான் கல்மாடியின் நம்பிக்கைக்கு உரிய அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய முடிந்தது.
அக்டோபர் 3 முதல் 14 வரை காமன்வெல்த் போட்டிகள் நடக்க இருக்கிறது. புதுடெல்லியை புரட்டிப் போட்டு பத்தாயிரம் கோடி செலவில் புதுப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். 1951, 1982ல் ஆசிய விளையாட்டு போட்டிகளை நடத்திய அனுபவம் டெல்லிக்கு இருக்கிறது. ஆனாலும் இது பிரமாண்ட ஏற்பாடு. 2020ல் ஒலிம்பிக் போட்டியை கொண்டுவர போடும் அடித்தளம். வேலைகள் மேயில் முடிந்திருக்க வேண்டும். இன்னும் நடக்கிறது. போட்டி முடிந்த பிறகும் தொடரக்கூடும்.
சரமாரியாக ஊழல் புகார்கள் பறக்கின்றன. பல நாடுகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக மணிசங்கர் அய்யர் தொடங்கிவைத்தார். அது ஒரு புகாரே அல்ல. டெல்லிக்கு வரும் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு லட்சம் டாலர் பணமும் மொத்த செலவுத் தொகையும் தருவதாக வாக்குறுதி கொடுத்துதான் 46க்கு 22 என்ற ஓட்டு வித்தியாசத்தில் கனடாவை தோற்கடித்து இந்தியா இந்த போட்டியை நடத்த அனுமதி பெற்றது. அப்போது ஹைதராபாதில் நாம் ஆப்ரிக்க , ஆசிய விளையாட்டு போட்டிகளை வெற்றிகரமாக நடத்தினோம். இந்தியாவிடம் வசதி இருக்கிறது என்ற நம்பிக்கை மற்ற நாடுகளுக்கு ஏற்பட்டது. அவர்களுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றுவது ஊழலாகாது.
பல்லாயிரம் கோடிகள் புழங்கும் திட்டத்தை செய்கூலி சேதாரம் இல்லாமல் நிறைவேற்ற முடியாது. இந்தியாவில் நடந்த முதல் ஊழல் இதுதான் என்பது போல சிலர் துள்ளிக் குதித்து விமர்சிப்பது போலித்தனம். 826 பதக்கம் ரெடியாக இருக்கிறதாம். 76 நாடுகள் பங்குபோட வருகின்றன. 2006 மெல்பர்ன் போட்டியில் இந்தியாவுக்கு 50 கிடைத்தது. டெல்லியில் அதிகம் கைப்பற்ற வழி தேடுவோம்.
Saturday, August 7, 2010 | By: INDIA 2121

ஒரு இந்து இளைஞனின் மரணம்- பாகிஸ்தானில் எழுச்சி

 ஒரு இந்து இளைஞனின் மரணம் பாகிஸ்தானின் மனசாட்சியை தூக்கத்தில் இருந்து உலுக்கி எழுப்பியிருக்கிறது.
இஸ்லாமாபாத் அருகே விமானம் மலையில் மோதி 152 பேர் பலியானார்கள். லண்டனில் இளைஞர் நாடாளுமன்ற முகாமுக்கு சென்று திரும்பிய 6 பேர் அதில் அடங்குவர். அவர்களில் ஒருவர் பிரேம்சந்த். சொட்டுநீர் பாசனத்தின் மூலம் பாகிஸ்தானில் வேளாண்மை புரட்சி ஏற்படுத்தலாம் என்று கட்டுரை சமர்ப்பித்து பாராட்டு பெற்றிருந்த இளைஞர். அவரது சவப்பெட்டி மேல் பெயருடன் ‘கஃபிர்’ என்ற வார்த்தையை சேர்த்திருந்தார் அதிகாரி.
இறுதிச் சடங்குக்காக பெட்டி மீது மதத்தை குறிப்பிடுவது வழக்கம். இந்து என்பதற்கு பதில் அப்படி எழுதி இருந்ததை பார்த்து பிரேம்சந்தின் நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். குடும்பத்தினர் பார்வையில் படாமல் மைபூசி மறைத்து, ‘நாங்கள் உன்னை நேசிக்கிறோம்’ என எழுதி வைத்தனர். என்றாலும், அஞ்சலி செலுத்தும்போது ஒரு மாணவன் அடக்க முடியாமல் கொட்டி விட்டான். பெற்றோரும் உறவினர்களும் துடித்துப் போனார்கள். மற்றவர்களும் குமுறினர்.
கஃபிர் என்பது அரபு வார்த்தை. முஸ்லிம் அல்லாதவர்களை குறிப்பிடுவது. இஸ்லாம் மார்க்கத்தை ஏற்காதவர் என்பது அதன் அர்த்தமாக இருந்தாலும், மத தீவிரவாதிகள் அதை ‘எதிரி’ என்ற அர்த்தத்தில் பயன்படுத்தியதால் அவதூறான சொல்லாக தோற்றம் பெற்றுவிட்டது. மரணத்தில்கூட ஒரு மனிதனுக்கு உரிய மரியாதை வழங்க நமக்கு தெரியவில்லையே என்று இளைஞர்கள் கொதிப்புடன் இணைய தளங்களில் எழுதுகின்றனர். அனைத்து மதங்களையும் மதிக்க இறைவன் கட்டளையிட்டாலும் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் ஏன் பின்பற்றுவதில்லை; இதுதான் சிறுபான்மை மதங்களை சேர்ந்த மக்களின் நாட்டுப்பற்றுக்கு வழங்கும் அங்கீகாரமா என்று சாட்டையடி கொடுக்கின்றனர்.
மதத்தின் பெயரால் தீவிரவாதத்தை நியாயப்படுத்த முற்படும் சக்திகள் செல்வாக்குடன் செயல்படும் பாகிஸ்தானில் இந்த கண்டன குரல்கள் கேட்பது அசாதாரண விஷயம். படித்தவர்களும் பத்திரிகைகளும்கூட அரசின் அநீதிகளை மவுனமாக சகித்துக் கொள்ள பழகிவிட்ட சூழலில் பாகிஸ்தான்இளைஞர்களின் ஆவேசம் ஆரோக்கியமான புதுக்காற்று.
Friday, August 6, 2010 | By: INDIA 2121

இந்தியர்கள் முதலிடம்

 இந்தியர்கள்தான் நேர்த்தியாக உடை அணிந்து வேலைக்கு செல்கின்றனர் என்கிறது ஒரு ஆய்வு. அரசு நிர்வாகம், ஊழல், சுகாதாரம், ஏழ்மை என்று பல ஆய்வுகளில் மட்டமான இடம் கிடைத்த வருத்தத்தில் இருந்தவர்களுக்கு ஆறுதல் பரிசு.
வேலைக்கு செல்லும்போது ஸ்மார்ட்டாக உடை அணிகிறீர்களா? அரை டிரவுசர் அணிந்து வேலைக்கு போவது சரிதானா? இவைதான் கேள்விகள். 24 நாடுகளில் 12 ஆயிரம் பேரிடம் கேட்கப்பட்டது. இந்தியர்களில் 58 சதவீதம் பேர் முதல் கேள்விக்கு ஆம் என்று பதில் சொல்லி இருக்கிறார்கள். 62 சதவீதம் பேர் ஆபீசுக்கெல்லாம் டிரவுசரில் போகக்கூடாது என்கின்றனர். அந்த அடிப்படையில், அலுவலகத்துக்கு கண்ணியமான முறையில் உடையணிந்து செல்பவர்களில் இந்தியர்கள்தான் முதலிடம் என்று ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர். அடுத்து தென் கொரியா (47%), சீனா (46), அமெரிக்கா (37) கடைசியில் ஹங்கேரி (12).
வேலை என்று வந்துவிட்டால் அதற்கான சம்பிரதாயத்தை பின்பற்றுவதே முறை என்று நம்மவர்கள் கருதுகின்றனர். 1980 வரை உலகமே அப்படி நினைத்தது. கம்ப்யூட்டர், சாப்ட்வேர் போன்ற வார்த்தைகள் பிரபலமாக தொடங்கியதும் அலுவலகத்துக்கு கேஷுவல் டிரஸ் போதாதா என்ற கேள்வி எழுந்தது. கோட், சூட், டையுடன் விடிய விடிய உழைப்பது நரகத்தில் உழல்வதற்கு சமம். நேரம் காலம் பாராமல் சாப்ட்வேர் இன்ஜினியர்களை வேலை வாங்க சிலிக்கான் வேலி தொழிலதிபர்கள் அறிமுகம் செய்த உத்தி ஷார்ட்ஸ்,ஷர்ட் அனுமதி.
வழக்கமான உழைக்கும் வர்க்கத்தில் இருந்து தங்களை வித்தியாசமாக காட்டிக் கொள்ள வேறு பிரிவினரும் சம்பிரதாய உடையை உதறினர். கல்லுடைப்பது போன்ற கடினமான பணிகளை செய்பவர்களுக்கு ஜீன்ஸ் ஷர்ட் வசதியாக இருந்தது. அதன் தொடர்ச்சியாக ‘படைப்பாளிகள்’ ஜீன்ஸ் + தொளதொளா சட்டைக்கு மாறினர். உடை விதிகள் அமலில் இல்லாத நிறுவனங்களில்கூட, உடையில் ஆர்வம் காட்டாதவர்கள் வேலையிலும் ஏனோதானோ என்றுதான் இருப்பார்கள் என்று நிறைய பேர் நம்புகிறார்களாம்.
இப்போதெல்லாம் அநேக கல்லூரிகளில் பார்மல் உடைக்கு மட்டுமே அனுமதி.
சில பெண்கள் கல்லூரிகளில் கூட புடவையில் வந்தால் மட்டுமே அனுமதி
நேர்த்தியாக உடை அணிபவர்கள்தான் பெரிய பொறுப்புகளுக்கு முன்னேற முடியும் என்று பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்திருப்பது கவனிக்க வேண்டிய விஷயம்.


Wednesday, August 4, 2010 | By: INDIA 2121

நண்பர்கள் தினம் கொண்டாடலாமா?

அப்பா தினம், அம்மா தினம் எல்லாம் மேலைநாட்டு தயாரிப்புகள். பத்தாம் வகுப்பு படிக்கும்போதே தனியாக வாழ பயிற்சி பெறும் கலாசாரம் அவர்களுடையது. பிரியமானவர்களுக்காக ஆண்டுக்கு ஒரு நாள் ஒதுக்கி மனதில் குறுகுறுப்பு ஏற்படாமல் தவிர்க்கிறார்கள். வாழ்த்து அட்டை, பரிசுப் பொருள் தயாரிப்பாளர்கள் இதனால் பலனடைகிறார்கள்.
இந்திய கலாசாரம் இறுதிவரை இணைபிரியாமல் வாழ்வது. கூட்டுக் குடும்ப வாழ்க்கை, முதுமையிலும் மறவாத பள்ளிப்பருவ நட்பு நமக்கு பழகிப் போன விஷயங்கள். எனவே, ‘தினம்’ கொண்டாட இங்கே அதிகம் பேர் ஆர்வம் காட்டுவதில்லை. என்றாலும், எதையாவது சாக்கிட்டு ஸ்வீட் எடு கொண்டாடு என்று குதூகலிப்பது மாணவ சமுதாயத்தின் வாடிக்கை. 24 மணி நேரமும் நட்பு என்ற கடலில் களைப்பில்லாமல் நீந்திக் கொண்டிருக்க முடியும் அவர்களால். அந்த ஜீவன்களை போய் ‘நண்பர்கள் தினம் கொண்டாடாதே’ என்று தடுப்பவர்கள் எத்தனை பெரிய அறிவாளிகளாக இருக்க வேண்டும்!
தர்ம சேனா, பஜ்ரங் தளம் என பல பெயர்களால் அறியப்படும் இந்து தீவிரவாத அமைப்புகள் அந்த அடாவடியில் ஈடுபட்டுள்ளன. தனிமனித சுதந்திரத்துக்கு முதல் மரியாதை அளிக்கும் அந்த மதத்துக்கு இவர்களைவிட எதிரிகள் எவருமில்லை. சட்டீஸ்கர் மாநிலத்தின் பல நகரங்களில் இந்த கூட்டம் தாண்டவம் ஆடியிருக்கிறது. நண்பர்கள் தின வாழ்த்து சொல்ல பொது இடங்களில் சந்தித்த மாணவ மாணவிகளை துரத்தி துரத்தி தாக்கி, முகத்தில் கரி பூசி, தலை முடியில் கோந்து தடவி பகிரங்கமாக அவமானப்படுத்தி இருக்கிறது.
கடந்த ஆண்டு மங்களூரில் இக்கூட்டம் மாணவிகளை அசிங்கப்படுத்தி மக்களின் ஆவேசத்தை சந்தித்தது. இந்த சம்பவங்களை போலீஸ் வேடிக்கை பார்த்துள்ளது. மகாராஷ்டிராவில் பரிவாருக்கு பதிலாக போலீசே அந்த புண்ணியத்தை கட்டிக் கொண்டது. புனே நகரில் பண்ணை வீட்டில் கூடிய 350 மாணவ மாணவிகளை சுற்றி வளைத்து கைது செய்ததாம்.
தீவிரவாதிகள், கொடுங் குற்றவாளிகள் சுதந்திரமாக உலவ விட்டு அப்பாவிகளை என்கவுன்டரில் போட்டுத் தள்ள கூச்சப்படாத ஒரு சீருடைப் படை இந்த நாட்டில் ஒழுக்கத்தை காப்பாற்ற தடி சுழற்றுவது காமெடியா டிராஜெடியா தெரியவில்லை.
Tuesday, August 3, 2010 | By: INDIA 2121

இங்கிலாந்து பிரதமர் பாகிஸ்தானுக்கு குட்டு

 ஊரெல்லாம் மகாராஜாவை பார்த்து, ‘அடடா, என்ன அழகான ஆடை!’ என்று உச்சு கொட்டி வியந்தபோது, ஒரு குழந்தை மட்டும் ‘அரசர் ஏன் அம்மணமாக இருக்கிறார்?’ என்று கேட்டதாக கதை கேட்டிருக்கிறோம். அரசனை பகைத்துக் கொள்வது புத்திசாலித்தனம் அல்ல என்பது தெரியாததால் அது உண்மையை பேசிவிட்டது.
இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனுக்கும் குழந்தை மனம். அமெரிக்காவிடம் ஆயுதமும் பணமும் வாங்கிக் கொண்டு அதன் படைகளை ஒழிக்க தலிபானுக்கு உதவுகிறது பாகிஸ்தான் என்ற உண்மை விக்கிலீக் மூலம் வெட்ட வெளிச்சமாகி இருப்பதை குறிப்பிட்ட கேமரூன், ‘பாலுக்கும் காவலாக பூனைக்கும் தோழனாக நடிக்கிறது பாகிஸ்தான். பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்கிறது. இதை சகித்துக் கொள்ள முடியாது’ என்று எச்சரித்தார்.
பாகிஸ்தானுக்கு கோபம். உண்மை பேசுவதே தப்பு; அதை இந்திய மண்ணில் நின்று பேசுவது கொடுங்குற்றம் ஆயிற்றே. இங்கிலாந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறது. ஐ.எஸ்.ஐ தலைவர் லண்டன் விசிட்டை கேன்சல் செய்துவிட்டார். கேமரூன் தைரியமான குழந்தையும்கூட. ‘உண்மையை ஓப்பனாக சொன்னேன். என் அரசு ஒளிவுமறைவு இல்லாமல் இனி அப்படித்தான் வெளிப்படையாக செயல்படும்’ என்று கூறிவிட்டார். கேமரூன் மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை என அவரது அமைச்சரும் கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் இரட்டை வேடத்தையும் பயங்கரவாத ஆதரவையும் பற்றி நினைவு தெரிந்த நாளிலிருந்து கரடியாக கத்திக் கொண்டிருக்கிறது இந்தியா. மகாத்மா காந்தி சமாதிக்கு வந்து மலர் வளையம் வைக்கும் வெளிநாட்டு தலைவர்கள் அத்தனை பேரும் இந்திய தலைவர்களோடு விருந்து சாப்பிடும் வேளையில் இந்த உண்மையை ஒப்புக் கொள்கின்றனர். பகிரங்கமாக சொல்வதில்லை. ஒரு மதச்சார்பு அரசை பகைத்துக் கொள்வானேன் என்ற ராஜநீதி அவர்களை தடுக்கிறது. 90 ஆயிரம் ஆவணங்கள் அம்பலப்படுத்திய பிறகும் உலகமகா வல்லரசு மென்று முழுங்கும் நிலையில் இங்கிலாந்தின் புதிய பிரதமர் சர்வதேச அரசியலில் நேர்வழியில் பயணம் செய்வதென்று எடுத்திருக்கும் முடிவு துணிச்சலானது.
வாய்மை தூய்மை நேர்மை போன்றவை அரசு கடைபிடிக்க வேண்டிய நெறிகள் அல்ல என்று எந்த சாணக்கியனும் சொல்லவில்லை.
Monday, August 2, 2010 | By: INDIA 2121

டாக்டர்கள் சிபாரிசு செய்யும் விளம்பரங்கள்

 
  டாக்டர்கள் சிபாரிசு செய்வது என்று சொல்லி ஒரு பொருளை விற்றால் மக்கள் நம்பி வாங்குவார்கள். அது டாக்டர் மீதான நம்பிக்கையின் வெளிப்பாடு. டாக்டரே போலியாக இருப்பாரோ என்ற கேள்வி எழும் நிலைமை ஏற்பட்ட பிறகு இந்த மாதிரியான விளம்பரத்துக்கு பலன் கிடைத்தால் பெரிய விஷயம்.
ஆனால், டாக்டர்கள் தம்மை பற்றி விளம்பரம் செய்யக்கூடாது என்று தடை இருக்கும் நாட்டில், டாக்டர்களின் சங்கம் எப்படி ஒரு பொருளுக்கு விளம்பரம் செய்ய முடியும்? இரண்டு லட்சம் டாக்டர்கள் உறுப்பினராக இருக்கும் இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ) அதைத்தான் செய்கிறது. டிராப்பிக்கானா பழரசம், குவாக்கர் ஓட்ஸ், டெட்டால், லைசால், அக்வாகார்ட், பேம்பர்ஸ் நாப்கின் என்று பல பொருட்கள் ஆரோக்கியத்துக்கு அல்லது சுகாதாரத்துக்கு நல்லது என்று ஐ.எம்.ஏ சான்றிதழ் அளித்துள்ளது. அதை சம்பந்தப்பட்ட கம்பெனிகள் தங்கள் விளம்பரங்களில் குறிப்பிடுகின்றன. இதற்காக சில கோடிகள் ஐ.எம்.ஏ.க்கு தரப்படுகிறது.
உலகத்திலேயே பொருள் தயாரிப்பாளர்களின் விளம்பரத்துக்கு ஒத்தாசையாக இருந்து அதற்காக பணம் பெறும் முதலாவது மருத்துவ அமைப்பு இதுதான். தயாரித்து பதப்படுத்திய பழச்சாறு தினமும் 200 மில்லிக்கு மேல் குழந்தைகளுக்கு கொடுத்தால் வளர்ச்சி பாதிக்கும், அதிக குண்டாகும் என ஆய்வுகள் எச்சரிக்கின்றன. இதை சுட்டிக்காட்டி ஒரு டாக்டர் தேசிய மனித உரிமை கமிஷனுக்கு புகார் அனுப்பினார். கமிஷன் ஐ.எம்.ஏ.க்கு நோட்டீஸ் அனுப்பியது. ‘இனி அப்படி செய்ய மாட்டோம். ஆனால் ஒப்பந்தத்தை இப்போது ரத்து செய்தால் நிறைய நஷ்ட ஈடு கொடுக்க நேரும்’ என்று ஐ.எம்.ஏ முறையிட்டுள்ளது. இந்த மாதம் கூடி ஒழுங்கு விதிகளை திருத்தி இதுபோன்ற அவலங்கள் நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுப்போம் என இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ) கூறியுள்ளது.
போலி, காலாவதி பிரச்னைகளால் பொதுமக்கள் மிரண்டு நிற்கும்போது தவறான சான்றிதழ் மூலம் ஆபத்துக்கு கதவு திறக்கும் வேலையை மருத்துவ அமைப்புகள் நிறுத்திக் கொள்ள வேண்டும். தனி மனிதர்கள்தான் பணம் சம்பாதிக்க பறக்கிறார்கள் என்றால், எந்த தேவையும் இல்லாத தொழில் அமைப்புகள் எதற்காக கோடிகளை தேடி ஓட வேண்டும் என்பதற்கும் மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய பொறுப்பு ஐ.எம்.ஏ.க்கு இருக்கிறது.
Related Posts with Thumbnails