காஷ்மீருக்கு சுயாட்சி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என பிரதமர் சொன்னதை கேட்டு பாரதிய ஜனதா கொதித்து எழுந்துள்ளது. எல்லா கட்சிகளும் ஒப்புக் கொண்டால் என்று அவர் கண்டிஷன் போட்டிருக்கிறார். அதை யாரும் கவனித்ததாக தெரியவில்லை. சுயாட்சி கொடுப்பது சுதந்திரம் கொடுப்பதற்கு முன்னோட்டம் என்ற ரீதியில் கண்டிக்கின்றனர்.
காஷ்மீர் ஒரு காலத்தில் இந்து மதம் தழைத்த பூமி. என்றாலும் அது பழங்கதை. 1350ல் தொடங்கிய முஸ்லிம் ஆட்சி ஐந்து நூற்றாண்டுகள் நீடித்ததன் தாக்கம் இன்றுவரை தெரிகிறது. 1820ல் மகாராஜா ரஞ்சித் சிங் கைக்கு காஷ்மீர் மாறியதோ, 1947ல் அதை சுதந்திர இந்தியாவுடன் மகாராஜா ஹரிசிங் இணைத்ததோ மத விகிதாசாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. தீவிரவாதிகள் மிரட்டலால் காஷ்மீரி பண்டிட்கள் வெளியேறி, பெரும்பான்மை சதவீதம்தான் தொண்ணூறை தாண்டியது. ஜம்முவும் லடாக்கும் அவர்கள் குறைவாக உள்ள பகுதிகள்.
இன்றைய தேதியில் காஷ்மீரின் 45 சதவீத நிலப்பரப்பு இந்தியாவிடம் உள்ளது. 33 சதவீதம் பாகிஸ்தான் பிடியில். மீதியை சீனா ஆக்கிரமித்துள்ளது. நம் வசமுள்ள காஷ்மீரையும் கைப்பற்றுவது, முடியவில்லை என்றால் அதை தனி நாடாக மாற்றுவது பாகிஸ்தானின் லட்சியம். இதற்காக 63 ஆண்டுகளாக போராடுகிறது. அவ்வப்போது போரிடுகிறது. சீனா, சவுதி உட்பட பல நாடுகள் உதவுகின்றன. அந்த கனவு நனவாக விடக்கூடாது என்பதற்காக இந்தியா கொடுக்கும் விலை கொஞ்சமல்ல.
ஏராளமான வீரர்களையும் அப்பாவிகளையும் பலி கொடுத்திருக்கிறோம். நாடெங்கும் நாசவேலைகளை சந்திக்கிறோம். எந்த மாநிலத்துக்கும் இல்லாத வகையில் நிதியை வாரி வழங்குகிறது மத்திய அரசு. காஷ்மீருக்கென தனி சட்டங்கள். தனி அரசியல் சாசனமே இருப்பது பலருக்கு தெரியாது. ஆனாலும் காஷ்மீர் மக்கள் நம்மை இந்தியர்கள் என அழைக்கிறார்களே தவிர தங்களை காஷ்மீரிகள் என்றுதான் அடையாளம் சொல்கின்றனர்.
பிரிவினை பேசிய மாநிலங்கள் எல்லாமும் காலப்போக்கில் தேசிய நீரோட்டத்தில் சங்கமித்து மூவர்ணக் கொடியை பெருமிதத்துடன் உயர்த்திப் பிடித்த பிறகும் மனம் மாறாத ஒரு மாநிலத்து மக்களை கட்டிக் கொண்டிருப்பதில் அர்த்தமென்ன இருக்கிறது?
2 comments:
its due to politicians in that state
PAK seek vengence for BANGLADESH, WHICHEVER way you choose(settle)or fight it is a problem.arms merchants,mullahs&to a lesser extenthindu fanatics
will not allow amicable settlement
Post a Comment