கொடைக்கானலில் பள்ளி ஆசிரியை பிரம்பால் அடித்ததில் மாணவி ஒருவர் மயங்கி விழுந்து இறந்திருக்கிறார். ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெற்றோரும் உறவினர்களும் பள்ளியை முற்றுகையிட்டும் பஸ் மறியல் செய்தும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
மாதா, பிதா, குரு, அதன்பிறகே தெய்வம் என்பார்கள். பாடம் சொல்லித் தர வேண்டிய குருவே கொலையாளியாக மாறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எல்லோருடைய வாழ்க்கையிலும் மிகவும் சந்தோஷமான காலகட்டம் என்பது மாணவ பருவம்தான். சாதி வித்தியாசம், ஏழை, பணக்காரன் வித்தியாசம் என எந்தக் கவலையும் இல்லாமல் சிறகடிக்கும் பருவம் . அதிலும் பிளஸ் 2 மாணவர்கள் டீன் ஏஜ் தொட்டவர்கள். பாட்டு, டான்ஸ், கேலி, கிண்டல் என உலகை மறந்து இருக்கும் பருவம். வகுப்பறையில் பாட்டுப் பாடி விளையாடியுள்ளனர் மாணவிகள். அப்போது அங்கு வந்த ஆசிரியைதான் கோபத்தில் கண் மண் தெரியாமல் மாணவியைப் போட்டு வெளுத்திருக்கிறார். அடி தாங்காமல் மயங்கி விழுந்துள்ளார் மாணவி. வீடு வந்த மாணவி ஆசிரியை பிரம்பால் அடித்த காயத்தை பெற்றோரிடம் காட்டியுள்ளார். சிறிது நேரத்தில் மீண்டும் மயங்கி விழுந்து இறந்து விட்டார்.
இப்போதெல்லாம் பெற்றோரே பிள்ளைகளை அடிப்பதில்லை. செல்லமாக வளர்க்கிறார்கள். அடித்தால் பயமில்லாமல் போய்விடும் என்பதால் அன்பு காட்டி திருத்துகிறார்கள். பிள்ளைகளும் பொறுப்பு உணர்ந்து படிக்கிறார்கள். அதனால்தான் டிவி, சினிமா, இன்டர்நெட் என எத்தனையோ விஷயங்கள் குறுக்கே வந்தாலும் அதையும் தாண்டி சாதனை படைக்கிறார்கள். பிளஸ் 2 வந்துவிட்டால், காலையில் கோச்சிங், ரெகுலர் கிளாஸ், ஈவினிங் கோச்சிங், நைட் ஸ்டடி, எக்ஸ்பர்ட் கிளாஸ், டியூஷன் என கேப் இல்லாமல் படிப்பு படிப்புதான். இடையில் கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் சிரித்து பேசி மகிழ்வது தவிர வேறு எந்த ரிலாக்ஸும் கிடையாது. கேலியும் கிண்டலும்தான் ஒரே பொழுதுபோக்கு. அதைக்கூட அனுமதிக்காமல் அடித்து நொறுக்குவது மனிதத் தன்மையே கிடையாது. படிப்பு முக்கியம்தான். அதற்காக ஞானிபோல் அத்தனையையும் விட்டுவிட வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்ப்பது எநத விதத்திலும் நியாயம் கிடையாது. படிப்பு இந்த ஆண்டு இல்லாவிட்டால் அடுத்த ஆண்டு. உயிர்...? தண்டனை தருவதற்கு முன்னால் ஆசிரியர்கள் இதை உணர வேண்டும்.
1 comments:
That teacher should be punished severely. Then only it would be a lesson to the other teachers.
Post a Comment