அசாம், அருணாச்சல், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, திரிபுரா ஆகியவற்றை வடகிழக்கு மாநிலங்கள் என்கிறோம். நாடாளுமன்றத்தில் 25 சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அங்கிருந்து டெல்லிக்கோ சென்னைக்கோ வருபவர்கள், இந்தியாவுக்கு சென்று வருகிறோம் என்று வீட்டில் சொல்லிவிட்டு கிளம்புகிறார்கள்.
இது காஷ்மீரில் சொல்வதுபோல் தனிநாடு எண்ணத்தால் அல்ல. மெயின் இந்தியாவுக்கும் வடகிழக்கு மாநிலங்களுக்கும் இடையே வங்காள தேசம் இருப்பதால் தோன்றும் தூர உணர்வு. பூட்டானுக்கும் வங்கதேசத்துக்கும் மத்தியில் ஓரிடத்தில் குறுகலான மேற்குவங்க நிலப்பரப்பு இருக்கிறது. அந்த வழியாகத்தான் சுற்றிவளைத்து செல்ல வேண்டியிருக்கிறது. வங்கதேசம் உருவாக இந்தியா காரணமாக இருந்தாலும் அந்த நாட்டுடன் நல்லுறவு இல்லை. எனவே அதன் வழியே வடகிழக்கை அடைய இயலவில்லை. அந்த நிலை விரைவில் மாறும் என்ற செய்தி வந்திருக்கிறது.
வங்கதேசம் வழியாக வடகிழக்கு மாநிலங்களுக்கு இந்திய மக்களும் வாகனங்களும் சரக்குகளும் செல்ல அந்நாட்டு அரசு அனுமதித்துள்ளது. அந்த இணைப்புக்கான நவீன சாலை, ரயில்பாதை வசதிகள் இப்போது இல்லை. அவற்றை ஏற்படுத்த இந்தியா 100 கோடி டாலர் கடன் வழங்கியுள்ளது. நேபாளம், பூட்டான் நாடுகளும் இந்த பாதைகளை பயன்படுத்தலாம். தெற்கு ஆசியாவின் நான்கு நாடுகள் இவ்வாறான ஒரு இணைப்பை உருவாக்க முன்வந்திருப்பது மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியின் ஆரம்பமாக அமையும் என்று நிபுணர்கள் கணிக்கின்றனர்.
வங்கதேசம் ஏழை நாடு. ஆனால், பாகிஸ்தானை போல அங்கும் இந்தியாவுக்கு எதிரான பிரசாரம் மூலமே அரசியல் நடத்தும் கட்சிகள் இருப்பதால் இந்திய பொருளாதார வளர்ச்சியின் பலன்களை முகர்ந்து பார்க்கக்கூட முடியாத நிலையில் தவித்தது. முஜிபுர் ரகுமானின் மகள் ஷேக் ஹசீனா பிரதமர் ஆன பிறகு அந்த பரிதாப நிலைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடிவு எடுத்தார். ஜனவரியில் டெல்லி வந்தபோது அதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு சென்றார். அதன் விளைவுகளில் ஒன்று இந்த இணைப்பு.
சம்பந்தப்பட்ட அனைத்து மக்களுக்கும் இதனால் பெரும் பலன்கள் கிடைக்கும் என்பதால் தீவிரவாதிகள் இந்த திட்டம் நிறைவேறாமல் தடுக்க எதையும் செய்வார்கள். இருநாட்டு அரசுகளும் ஆரம்பத்திலேயே அதற்கு தயாராவது நல்லது.
0 comments:
Post a Comment