Wednesday, August 4, 2010 | By: INDIA 2121

நண்பர்கள் தினம் கொண்டாடலாமா?

அப்பா தினம், அம்மா தினம் எல்லாம் மேலைநாட்டு தயாரிப்புகள். பத்தாம் வகுப்பு படிக்கும்போதே தனியாக வாழ பயிற்சி பெறும் கலாசாரம் அவர்களுடையது. பிரியமானவர்களுக்காக ஆண்டுக்கு ஒரு நாள் ஒதுக்கி மனதில் குறுகுறுப்பு ஏற்படாமல் தவிர்க்கிறார்கள். வாழ்த்து அட்டை, பரிசுப் பொருள் தயாரிப்பாளர்கள் இதனால் பலனடைகிறார்கள்.
இந்திய கலாசாரம் இறுதிவரை இணைபிரியாமல் வாழ்வது. கூட்டுக் குடும்ப வாழ்க்கை, முதுமையிலும் மறவாத பள்ளிப்பருவ நட்பு நமக்கு பழகிப் போன விஷயங்கள். எனவே, ‘தினம்’ கொண்டாட இங்கே அதிகம் பேர் ஆர்வம் காட்டுவதில்லை. என்றாலும், எதையாவது சாக்கிட்டு ஸ்வீட் எடு கொண்டாடு என்று குதூகலிப்பது மாணவ சமுதாயத்தின் வாடிக்கை. 24 மணி நேரமும் நட்பு என்ற கடலில் களைப்பில்லாமல் நீந்திக் கொண்டிருக்க முடியும் அவர்களால். அந்த ஜீவன்களை போய் ‘நண்பர்கள் தினம் கொண்டாடாதே’ என்று தடுப்பவர்கள் எத்தனை பெரிய அறிவாளிகளாக இருக்க வேண்டும்!
தர்ம சேனா, பஜ்ரங் தளம் என பல பெயர்களால் அறியப்படும் இந்து தீவிரவாத அமைப்புகள் அந்த அடாவடியில் ஈடுபட்டுள்ளன. தனிமனித சுதந்திரத்துக்கு முதல் மரியாதை அளிக்கும் அந்த மதத்துக்கு இவர்களைவிட எதிரிகள் எவருமில்லை. சட்டீஸ்கர் மாநிலத்தின் பல நகரங்களில் இந்த கூட்டம் தாண்டவம் ஆடியிருக்கிறது. நண்பர்கள் தின வாழ்த்து சொல்ல பொது இடங்களில் சந்தித்த மாணவ மாணவிகளை துரத்தி துரத்தி தாக்கி, முகத்தில் கரி பூசி, தலை முடியில் கோந்து தடவி பகிரங்கமாக அவமானப்படுத்தி இருக்கிறது.
கடந்த ஆண்டு மங்களூரில் இக்கூட்டம் மாணவிகளை அசிங்கப்படுத்தி மக்களின் ஆவேசத்தை சந்தித்தது. இந்த சம்பவங்களை போலீஸ் வேடிக்கை பார்த்துள்ளது. மகாராஷ்டிராவில் பரிவாருக்கு பதிலாக போலீசே அந்த புண்ணியத்தை கட்டிக் கொண்டது. புனே நகரில் பண்ணை வீட்டில் கூடிய 350 மாணவ மாணவிகளை சுற்றி வளைத்து கைது செய்ததாம்.
தீவிரவாதிகள், கொடுங் குற்றவாளிகள் சுதந்திரமாக உலவ விட்டு அப்பாவிகளை என்கவுன்டரில் போட்டுத் தள்ள கூச்சப்படாத ஒரு சீருடைப் படை இந்த நாட்டில் ஒழுக்கத்தை காப்பாற்ற தடி சுழற்றுவது காமெடியா டிராஜெடியா தெரியவில்லை.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails