Tuesday, August 3, 2010 | By: INDIA 2121

இங்கிலாந்து பிரதமர் பாகிஸ்தானுக்கு குட்டு

 ஊரெல்லாம் மகாராஜாவை பார்த்து, ‘அடடா, என்ன அழகான ஆடை!’ என்று உச்சு கொட்டி வியந்தபோது, ஒரு குழந்தை மட்டும் ‘அரசர் ஏன் அம்மணமாக இருக்கிறார்?’ என்று கேட்டதாக கதை கேட்டிருக்கிறோம். அரசனை பகைத்துக் கொள்வது புத்திசாலித்தனம் அல்ல என்பது தெரியாததால் அது உண்மையை பேசிவிட்டது.
இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனுக்கும் குழந்தை மனம். அமெரிக்காவிடம் ஆயுதமும் பணமும் வாங்கிக் கொண்டு அதன் படைகளை ஒழிக்க தலிபானுக்கு உதவுகிறது பாகிஸ்தான் என்ற உண்மை விக்கிலீக் மூலம் வெட்ட வெளிச்சமாகி இருப்பதை குறிப்பிட்ட கேமரூன், ‘பாலுக்கும் காவலாக பூனைக்கும் தோழனாக நடிக்கிறது பாகிஸ்தான். பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்கிறது. இதை சகித்துக் கொள்ள முடியாது’ என்று எச்சரித்தார்.
பாகிஸ்தானுக்கு கோபம். உண்மை பேசுவதே தப்பு; அதை இந்திய மண்ணில் நின்று பேசுவது கொடுங்குற்றம் ஆயிற்றே. இங்கிலாந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறது. ஐ.எஸ்.ஐ தலைவர் லண்டன் விசிட்டை கேன்சல் செய்துவிட்டார். கேமரூன் தைரியமான குழந்தையும்கூட. ‘உண்மையை ஓப்பனாக சொன்னேன். என் அரசு ஒளிவுமறைவு இல்லாமல் இனி அப்படித்தான் வெளிப்படையாக செயல்படும்’ என்று கூறிவிட்டார். கேமரூன் மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை என அவரது அமைச்சரும் கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் இரட்டை வேடத்தையும் பயங்கரவாத ஆதரவையும் பற்றி நினைவு தெரிந்த நாளிலிருந்து கரடியாக கத்திக் கொண்டிருக்கிறது இந்தியா. மகாத்மா காந்தி சமாதிக்கு வந்து மலர் வளையம் வைக்கும் வெளிநாட்டு தலைவர்கள் அத்தனை பேரும் இந்திய தலைவர்களோடு விருந்து சாப்பிடும் வேளையில் இந்த உண்மையை ஒப்புக் கொள்கின்றனர். பகிரங்கமாக சொல்வதில்லை. ஒரு மதச்சார்பு அரசை பகைத்துக் கொள்வானேன் என்ற ராஜநீதி அவர்களை தடுக்கிறது. 90 ஆயிரம் ஆவணங்கள் அம்பலப்படுத்திய பிறகும் உலகமகா வல்லரசு மென்று முழுங்கும் நிலையில் இங்கிலாந்தின் புதிய பிரதமர் சர்வதேச அரசியலில் நேர்வழியில் பயணம் செய்வதென்று எடுத்திருக்கும் முடிவு துணிச்சலானது.
வாய்மை தூய்மை நேர்மை போன்றவை அரசு கடைபிடிக்க வேண்டிய நெறிகள் அல்ல என்று எந்த சாணக்கியனும் சொல்லவில்லை.

1 comments:

எஸ்.கே said...

எல்லோரும் இப்படி நேர்வழியில் நடந்தால் நல்லது!

Post a Comment

Related Posts with Thumbnails